காலை கதிரவனின் ஒளியில் எழில் தேவதையாக நின்ற நீரஜாட்சியை விழியெடுக்காமல் பார்த்த ரகுநந்தனை அவளும் தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுவிட்டாள். எப்போதும் ஜீன்ஸிலேயே தலையைக் கூட வாராமல் கால்பந்துடன் ஓடிக்கொண்டிருந்தவனா இவன் என்னும் அளவுக்கு வேஷ்டி சட்டையில் பொறுப்பான ஆண்மகனாக நின்றவனைக் கண்டு அவளது மனம் துணுக்குற்றாலும், தன்னை விழுங்கும் அந்தப் பார்வையைக் கண்டதும் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவளின் இயல்பான குணம் தலைதூக்க, அவனை முறைத்தபடி அவன் அருகில் வந்து சேர்ந்தாள் அவள்.
அவளால் எப்போதும் அவனைத் தவிர்த்துவிட்டுப் போவதைப் போல் இன்றும் ஓடிவிடலாம் என்று நினைத்தவளுக்கு, ஓடுவதற்கு அவளது தாவணி ஒத்துழைக்கவில்லை என்பது முதல் காரணம். இரண்டாவது, தோட்டத்தில் அமர்ந்திருந்த பட்டாபிராமன் அவளை எதற்கோ அழைத்தார். அவர் அழைத்து அவள் என்றுமே தாமதித்துச் சென்றதில்லை. கவனமாகப் புல்வெளிக்கு நடுவில் இருக்கும் நடைபாதையில் கால் பதித்து நடந்தவள், அணிந்திருந்த பாவாடையின் நுனி ஈரமான புற்களின் மீது பட்டுவிடாமல் கவனமாகச் சிறிது தூக்கிப் பிடித்தபடி வந்தாள்.
தனது நடைபாதையின் குறுக்கே நின்று வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு எரிச்சலானவள், அதைச் சிறிதும் மறைக்காதக் குரலில் “வழி” என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்க்க, இத்தனை ஆண்டுகள் கழித்து அவள் வாயிலிருந்து வந்த ஒற்றை வார்த்தை அவன் மனதில் சாரலடிக்க வைக்க, அவன் புன்னகைத்தான்.
ஏற்கெனவே நடைபாதையின் நடுவில் நந்தி போல் நின்றவனைக் கண்டு அவளுக்கு எரிச்சல். இதில் அவன் சிரிக்க வேறு செய்ய, கடுப்பில் அவள் முறைத்து வைத்தாள். ரகுநந்தன் “எங்கே போறதுக்கு வழி?” என்றுக் கேட்க, நீரஜாட்சி அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி “நான் எங்கே போறதுக்குக் கேக்குறேனு உனக்கு தெரியாதா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டாள்.
அவன் மீண்டும் புன்னகைத்தபடி “நீ நிக்கற இடத்தில இருந்து ரொம்பப் பக்கத்துல இருக்கறது ஒன்னே ஒன்னு தான். அது என்னோட ஹார்ட். அதுக்குள்ள போகறது ரொம்ப ஈஸி. இந்த நாலு கண்ணும் ரெண்டு செகண்ட் பார்த்துக்கிட்டா போதும்” என்று கவிதையாய் உலறி வைக்க, நீரஜாட்சி அவனது பேச்சைக் கேட்டு வேண்டாவெறுப்பாய் சிரித்தபடி “அஹான்! அம்மாஞ்சியோட ஹார்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கோ? ஏன் கேக்குறேனா நான் ஐம்பத்து அஞ்சு கிலோ, இவ்ளோ வெயிட்ட உங்காத்து கால் கிலோ இதயம் எப்பிடி தாங்கும்?” என்று பதிலடி கொடுத்துவிட்டு “வழியை விட்டு ஓரமா நில்லு. நான் புல்லுல இறங்குனா என் டிரஸ் ஈரமாயிடும். எனக்கு ஈரம்னாலே அலர்ஜி” என்றுச் சொல்ல அவன் வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.
அவள் “இதோ வந்துட்டேன் பட்டு” என்றுப் புன்னகைத்தபடி நகர, ரகுநந்தன் “பட்டுவை தான் நல்லா கவனிக்கிறியேம்மா! அப்பிடியே அவரோட பேரனையும் கவனிச்சா நன்னா இருக்கும்” என்றுக் கேலியாகச் சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்நோக்கினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நீரஜாட்சி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள் திரும்பி அவனைப் புருவத்தால் வெட்டிவிடுவது போல முறைத்தவள் “கவலைப்படாதேள் அம்மாஞ்சி! சிறப்பா கவனிச்சிடுவோம்” என்று இருபொருள் பட சொல்லிவிட்டு பட்டாபிராமனை நோக்கிச் செல்ல, அவள் பின்னே செல்ல எத்தனித்தவனைக் கைப்பற்றி நிறுத்தினான் ஹர்சவர்தன்.
அவனை ஏமாற்றத்துடன் பார்த்த ரகுநந்தன் “டேய் அண்ணா நல்ல நேரத்துல கரடி மாதிரி வந்துட்டியேடா” என்று குறைபட, ஹர்சவர்தன் “நீ ஏன்டா நீரஜா பின்னாடி போற?” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்க்க அவன் வெட்கத்துடன் தலை குனிந்தான்.
ஹர்சவர்தன் அவனை வினோதமாகப் பார்த்து வைக்க, அவன் சுதாரித்துக் கொண்டு “டேய் அண்ணா! நான் தான் உன்னண்ட சொன்னேன் இல்லயா? எனக்கு இந்த ஜீன்ஸ், ஸ்கர்ட்னு பார்த்து அலுத்துடுத்துடா. அதான் பாவாடை தாவணியைப் பார்த்ததும் மனசுக்குள்ள ஒரு அழகான ஃபீலிங்” என்றுச் சொல்ல, ஹர்சவர்தன் கேலியாக “அப்படியா சார்? இன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கற கரோலின் கூட தாவணி தான் உடுத்திண்டிருக்கா. இவ்வளவு ஏன் நீரஜா ஃப்ரெண்ட் கவிதா அங்கே நிக்கறா பாரு, அவளும் தாவணி தான் உடுத்திண்டு நிக்கறா. அவாள்ளாம் உன் கண்ணுல படவே இல்லயோ?” என்றுச் சொல்ல, ரகுநந்தன் கன்னத்தில் போட்டுக் கொண்டபடி “பெருமாளே! என்னடா பேசற அண்ணா? அவாள்ளாம் என்னோட தங்கைகள்டா! அவாளைப் போய் நான் எப்பிடி பார்க்கறது? நான் பார்க்கறதா இருந்தா ஒன்லி என் நீருகுட்டியை மட்டும் தான் பார்ப்பேன்” என்றுச் சொல்லிவிட்டுத் தாத்தாவுடன் பல வித போஸ்களில் செல்ஃபி எடுத்துக் கொண்டவளை நோக்கி நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தான்.
ஹர்சவர்தனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அவளைக் குட்டிப்பிசாசு என்று வைதவன் இவன் தான் என்றுச் சொன்னால் யாராலும் அதை நம்ப முடியாது. தம்பியின் தோளில் தட்டி அழைத்தவன் “அது எப்பிடிடா இத்தனை நாளும் குட்டிப்பிசாசா தெரிஞ்சவ இன்னைக்கு நீருகுட்டியா மாறிட்டா?” என்று நம்ப முடியாமல் கேட்டவனை ரகுநந்தன் என்னடா நீ என்பது போல் பார்த்து வைத்தான்.
பின்னர் அண்ணனிடம் “டேய் அண்ணா சின்ன வயசுல பாட்டி ராமாயணக் கதை சொல்லுவா! நோக்கு நியாபகம் இருக்கா?” என்றுக் கேட்க அவன் ஆமென்று தலையாட்டினான். தொடர்ந்து “அதுல அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அந்த வரியை நீ கேள்விப்பட்டிருக்கியா? அதை பாட்டி சொல்லுறச்ச நான் நம்பலடா. அது எப்பிடி ஸ்ரீராமனுக்கு ஒரு பார்வையில சீதாதேவி மேல காதல் வந்துச்சுனு நான் நெறைய கிண்டல் பண்ணிருக்கேன். ஆனா அதோட அருமை இன்னைக்கு காத்தால தான் எனக்கே புரிஞ்சதுடா. ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு கணம் போதும்டா காதல் வர்றதுக்கு” என்று ரசனையுடன் கூற ஹர்சவர்தனுக்கும் அந்த வார்த்தைகள் பொன்மொழியாய் அவன் செவியில் விழுந்தன.
எல்லாம் வர்ஷா விஜயலெட்சுமியுடன் வரும் வரை தான். அவர் வந்ததும் வர்ஷாவை ஹர்சவர்தன் இருக்கும் இடத்துக்கு அனுப்பிவிட்டுப் பத்மாவதியுடன் சேர்ந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். அதன் பின் இளையவர்கள் மட்டும் பட்டாசுகளைப் போட்டு நொறுக்கி அந்தத் தெருவையே கோலாகலமாக்கினர்.
கிருஷ்ணஜாட்சி பயந்தவளாய் கேட் அருகில் நின்று கொள்ள, நீரஜாட்சி தாவணியை இழுத்துச் செருகிக் கொண்டு அத்தனை வெடிகளையும் பாகுபாடின்றி வெடித்துத் தீர்த்தாள். பட்டாபிராமன் மகன்கள் மனைவியுடன் இளையவர்களின் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கிருஷ்ணஜாட்சி பூஜைக்குப் பூக்களைப் பறித்தவள் அவற்றை பெரிய தாம்பாளத்தில் பரப்பி அவளது இளைய மாமியிடம் கொண்டுச் சென்றாள்.
அப்போது ஹர்சவர்தனின் மொபைலைப் பிடுங்கிக் கொண்டு வர்ஷா ஓடிவர, கிருஷ்ணஜாட்சி நகர்ந்து வழிவிட்டவள் அவள் பின்னே வந்த ஹர்சவர்தனின் மீது மோதி தாம்பாளத்தைக் காற்றில் பறக்க விட, அதில் பறித்து வைத்திருந்த மொத்தப் பூக்களும் அவள் தலையில் தான். அவள் நின்ற கோலத்தைக் கண்டு திகைத்த ஹர்சவர்தன், அவள் உதட்டைப் பிதுக்கியபடி “என்ன அம்மாஞ்சி பார்த்து வரக் கூடாதா? இப்போ எல்லா பூவும் கொட்டிடுச்சு” என்றபடி கூந்தலை உதற, அவன் அவள் பேசிய அழகை ரசித்தபடி நின்று விட்டான்.
கிருஷ்ணஜாட்சியின் சுருள் கூந்தலில் இருந்து மலர்கள் விடுபட மறுக்க, ஹர்சவர்தன் அவற்றைத் தன் கைகளால் எடுத்துவிட, கிருஷ்ணஜாட்சி அன்று ஹோட்டலில் அவனது செய்கையில் விழி விரித்தது போல அன்றும் விழிவிரித்துச் சிலையாய் நின்றாள் செய்வதறியாது. “இப்போ ஓகேவா?” என்றபடி சிரித்துவிட்டு அவன் சென்றுவிட, அவள் கீழே சிதறிக் கிடந்த பூக்களைப் பார்த்தபடி “இந்த என்.கே நம்பர் ஒன்னால எனக்கு ஒரு வேலைக்கு இரு வேலையா போச்சு” என்று முணுமுணுத்தபடி மலர்களைப் பெருக்கி அள்ளியவள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் மலர்களைப் பறித்து வரச் சென்றாள்.
சிறிது நேரத்தில் பறித்து முடித்து விட்டு மைதிலியிடம் கொடுத்தவள் பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட, சிறிது நேரத்தில் பூஜை ஆரம்பித்தது. கிருஷ்ணஜாட்சி கரோலினுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிக் கொண்டிருக்க, நீரஜாட்சி கவிதாவுடன் சேர்ந்து பூஜை நிகழ்வுகளை வீடியோவாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளும் கவிதாவும் கேமராவைத் தங்களைப் பார்த்துத் திருப்பிக் கொண்டு “கவி ரெடியாடி?” என்க, கவிதா கட்டைவிரலைக் காட்டினாள்.
நீரஜாட்சி ஒரு கையால் கேமராவைப் பிடித்துக் கொண்டு பூஜையறை பின்னணியில் நின்றவள் கவிதாவையும் கேப்சர் செய்தபடி “ஹாய் நான் உங்க நீரஜாட்சி!” என்க கவிதா “அண்ட் நான் உங்க கவிதா” என்றுப் புன்னகைக்க, இருவரும் சேர்ந்து “நாங்க இப்போ உங்களுக்கு பிரசண்ட் பண்ணப் போறது – தி கிரேட் தீபாவளி ஆஃப் ஸ்ரீநிவாசவிலாசம்” என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது போல அதை வீடியோ பிடித்தபடி லூட்டியடித்தனர்.
ரகுநந்தன் அவள் செய்த குறும்புத்தனங்களை ரசித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் நின்ற பத்மாவதி கடுகடுத்தபடி “பொம்மனாட்டியா லெட்சணமா பூஜையில கலந்துக்காம இன்னும் குழந்தையாட்டம் லூட்டி அடிக்கறதுகள்” என்று முணுமுணுக்க அவன் திகைத்தபடி திரும்பினான். “மா! எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க” என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தவர் “நோக்கும் பாஷா மாறிடுச்சா? பேஷ் பேஷ்! இதுக்கு தான் உன்னை அங்கேலாம் அனுப்ப மாட்டேனு தலை தலையா அடிச்சிண்டேன். என் பேச்சை இங்கே யாரு மதிக்கறா?” என்று அவன் பேசிய விதத்தில் கவனத்தை வைத்தவர் அவன் பேசிய விஷயத்தைக் கவனிக்க மறந்தார்.
அதன் பின் வீட்டின் மூத்த மருமகளாய் பொறுப்பாய் பூஜையைச் செய்து முடித்து அனைவருக்கும் பட்சணங்களைக் கொடுத்துவிட்டு, விஜயலெட்சுமியிடம் சேர்ந்து மதிய உணவுக்குத் தேவையானவற்றைப் பார்க்கப் போக மைதிலியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். சீதாலெட்சுமியை அழைத்துக் கொண்டு நீரஜாட்சியும் அவுட் ஹவுஸிற்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாள். வழக்கத்துக்கு மாறாக அவளுமே இன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் போட்டதால் அவளுக்கும் இன்று அசதியாக இருந்தது. கரோலினிடம் “லின், நான் சித்தம்மா கூட அவுட் ஹவுஸ்க்கு போறேன். கிருஷ்ணா வந்து கேட்டாச் சொல்லிடு. ஏய் கவி நான் தூங்கி எழுந்து வர்றதுக்குள்ள மத்தவங்க கிட்ட பேசி வீடியோ எடுத்து வைடி. ஈவினிங் ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணிக்கலாம்” என்றுச் சொன்னபடி சீதாலெட்சுமியைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
சீதாலெட்சுமிக்கு ஏஸியைப் போட்டுவிட்டவள், அவளும் உடை மாற்றிவிட்டு அவளது சொர்க்கமான வராண்டாவில் போர்வையை விரித்துப் படுத்தவள் நன்றாக அசந்து உறங்கிவிட்டாள்.
அங்கே ரகுநந்தனோ நீரஜாட்சியைக் காணாது தேடியவன் யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையுடன் சுற்றிக் கொண்டிருக்க, அவனை அவனது தாத்தாவின் நண்பரான சேஷன் பிடித்துக் கொண்டார். “டேய் அம்பி! சேமமா இருக்கியாடா?” என்றபடி அவன் தோளில் கைப்போட்டு அழைத்துச் சென்றவர், பின்னர் அவன் லண்டனில் எப்படி இருந்தான், எங்கே தங்கினான், என்ன சாப்பிட்டான் முதற்கொண்டு விசாரித்துக் கொண்டிருக்க அவனுக்கோ எப்போதடா இந்த மனிதர் நம்மை விடுவார் என்ற எண்ணம். வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் பட்டாபிராமனும் அவர்களுடைய உரையாடலில் கலந்து கொள்ள, அவனது மனசாட்சி “அடேய் ரகுநந்தா, இப்போ மட்டும் நீ கழண்டு போனியோ உன் தாத்தா என் கிட்ட பேசக் கூட நோக்கு டைம் இல்லையாடா நந்தானு சொல்லி வாழ்க்கை முழுக்கக் குத்தி காண்பிப்பார்” என்றுச் சொல்ல, அவன் தாத்தாவின் குத்திக் காட்டலைத் தவிர்ப்பதற்காக ஒரு மணி நேரம் அந்த இரண்டு பெரிய மனிதர்களின் பேச்சைப் பொறுமையாகச் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவனுடைய தந்தையும் சித்தப்பாவும் வந்துவிடவே அவர்களிடம் இருந்து மெதுவாக நழுவியவன், கரோலினும் கவிதாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு “ஹாய் தங்கச்சிங்களா! நீங்க யாராச்சும் நீரஜாவைப் பார்த்தீங்க?” என்றுக் கேட்க, அவர்களும் அவன் தங்கை என்று விளித்ததில் மகிழ்ந்துப் போய் “அவ சித்தம்மா கூட அவுட் ஹவுஸ்க்குப் போயிட்டாளே” என்க அவன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றான்.
வெளிப்புற மரக்கதவு உள்ளே தாழிடப்பட்டிருக்க, கதவைத் தட்டினான் ரகுநந்தன். உள்ளே நீரஜாட்சி நல்ல உறக்கத்திலிருந்தவள் தூக்கம் கலைந்த கடுப்பில் எழுந்துச் சென்று கதவைத் திறந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த ரகுநந்தன் கதவு திறந்ததும் புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், அதற்குள் அவள் உடை மாற்றிவிட்ட ஏமாற்றத்தில் புன்னகையை விழுங்கிக் கொண்டான்.
நீரஜாட்சி தனது உறக்கத்தையும் கலைத்துவிட்டு எதுவும் பேசாமல் முட்டைக்கண்ணை உருட்டிக் கொண்டு நின்றவனைக் கண்டு கொலைவெறியானவளாய் “என்ன?” என்று அவனைக் கடிக்காத குறையாய்க் கேட்க, அவளது குரலின் உஷ்ணத்தைக் கண்டு கொஞ்சம் ஜெர்க் ஆனவன் அதை மறைத்துக் கொண்டு “அதுக்குள்ள டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டியா?” என்றுக் கேட்டான் காரியத்திலேயே கண்ணாக.
அவள் எரிச்சலுடன் “நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டேனானு பார்க்கத் தான் வந்தியா?” என்றுக் கேட்க, அவன் முதலில் ஆமென்று தலையாட்டியவன் பின்னர் அவளின் முறைப்புக்கு பயந்தவனாய் இல்லை என்று தலையை ஆட்டினான். பின்னர் “கொஞ்சம் உள்ளே போய் பேசலாமே” என்க அவள் யோசனையுடன் வழிவிட்டவள் “உள்ளே சித்தம்மா அசந்து தூங்கிட்டிருக்கா. சோ டிஸ்டர்ப் ஆயிடும். நீ இங்கேயே சொல்லு” என்றபடி வராண்டாவைக் கைகாட்ட அவன் வராண்டாவுக்கு வந்தவன் அவளது விரிப்பில் அமர்ந்து கொண்டான்.
“பிளீஸ் சிட் டவுன்” என்று அவளிடம் சாதாரணமாகத் தன் அருகில் தரையைத் தட்டிக் காண்பிக்க, அவளோ தனக்கு நிற்பதே வசதி என்பது போல வராண்டாவின் சுற்றுச்சுவரின் மீது சாய்ந்து கொண்டபடி கையைக் கட்டி நின்று கொண்டாள். அவளது விழிகள் இன்னும் அவனையே கூறு போட்டுக் கொண்டிருக்க, ரகுநந்தன் தான் பேச வந்த விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தான்.
“நீரு, நீயும் அத்தங்காவும் இங்கே வந்ததுல இருந்து ஆத்துல எவ்ளோவோ விஷயங்கள் நடந்துருச்சு. பட் அதுல்லாம் எவ்ளோ சில்லியான காரணத்துக்காக நடந்துச்சுனு எல்லாரையும் விட்டு விலகியிருந்தப்போ தான் எனக்கு புரிஞ்சுது. மத்த விஷயங்களை விடு. நம்ம ரெண்டு பேருக்குள்ள நடந்த சண்டை ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமானது. அதைப் பத்தி பேசி சார்ட் அவுட் பண்ணி பேசி தீர்த்துக்கலாம்” என்று உண்மையான அக்கறையுடன் கூறினான்.
அவனது வார்த்தையைக் கேட்டதும் நீரஜாட்சி பொய்யாய் ஆச்சரியப்பட்டவளாய் “அம்மாஞ்சி, நீங்களா பேசறேள்? தி கிரேட் பத்மாவதி அம்மாவோட மகன் ரகுநந்தனா என் கிட்ட இவ்ளோ பொறுமையா பேசுனது? நேக்கு புல்லரிச்சுப் போய்டுச்சு பார்த்தேளா?” என்று கேலி செய்ய அவன் அவளது செய்கையில் திகைத்தவனாய் “நீரு நீ கோவத்துல இருக்கேனு….” என்றுப் பேசத் தொடங்க அதை இடைமறித்தாள் அவள்.
“நீங்க போய் என்னண்ட மன்னிப்பு கேக்கலாமோ அம்மாஞ்சி? நாங்கலாம் உங்காத்த அண்டிப் பிழைக்கறவா. நீங்கலாம் இல்லாம போயிட்டேள்ணா நானும் கிருஷ்ணாவும் இந்நேரம் ஃபிளாட்ஃபார்ம்ல பிச்சை எடுத்திண்டுலா இருந்திருப்போம்” என்றுச் சொல்ல அவன் தான் சொன்ன வார்த்தைகள் எந்த அளவுக்கு அவளைப் பாதித்திருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்து கொண்டான். நிஜமான வருத்தத்துடன் “ஐயாம் ரியலி சாரி ஃபார் வாட் ஐ வாஸ் சேயிங் இன் த பாஸ்ட். நான் ஏதோ கோவத்துல அப்பிடி பேசிட்டேன்” என்றுச் சொல்ல அப்போதுமே அதை நம்ப முடியாத நீரஜாட்சி உடனே ஓடிச் சென்று வாசலில் நின்று தோட்டத்தை எட்டிப் பார்த்தாள்.
“என்னாச்சு நீரு?” என்றவனிடம் “போதிமரத்தைத் தேடுறேன் அம்மாஞ்சி” என்றபடி உள்ளே வந்தவள் அவனை நக்கலாகப் பார்த்தபடி “நம்மாத்து தோட்டத்துல போதிமரத்தைக் காணுமே. ஒரு வேளை லண்டன்ல இருந்திருக்குமோ என்னவோ? நேக்கு ஒரு ஃபேவர் பண்ணுறேளா? நெக்ஸ்ட் டைம் நீங்க லண்டன் போறச்சே உங்களைப் பெத்தப் புண்ணியவதியையும் கூட்டிண்டுப் போய் அந்த மரத்தடியில சித்த நாழி உக்கார வச்சு அழைச்சிண்டு வாங்கோ. அவாளுக்கு ஞானம் வர்றதுக்காக இதை நான் சொல்லலை. அட்லீஸ்ட் வயசுக்கு ஏத்த மாதிரி மனசும் கொஞ்சம் விசாலமா ஆகுமானு பார்க்கத் தான் கேக்கறேன்” என்றுச் சொல்லிவிட்டு முகத்தைச் சுழித்தபடி நின்று கொண்டாள்.
எப்போதும் போல தனது தாயைப் பற்றி அவள் பேசியதும் அவனுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்று ஏற, கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அரும்பாடு பட்டான். நீரஜாட்சிக்கும் அவனது கோபம் மெதுவாகத் தலைகாட்டுவது தெரிந்தாலும் அதை ஒரு அலட்சியத்தோடு பார்த்தவள் “நான் சொல்ல வர்றதை நல்லா கேட்டுக்கோ. இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளிலேயே எங்களை ஆர்ஃபனேஜுக்கு அனுப்பச் சொன்ன உன் அண்ணனையோ, வார்த்தைக்கு வார்த்தை எங்களை கரித்துக் கொட்டுற உன் அம்மாவையோ, அனாதைங்கன்னு எங்களைக் குத்திக் காட்டிப் பேசுன உன்னையோ எனக்கு எப்போவுமே பிடிக்காது. இப்போ நான் போட்டிருக்கிற டிரஸ்சில இருந்து நீ உக்காந்துட்டிருக்கற போர்வை வரைக்கும் என் கிருஷ்ணாவோட உழைப்புல வாங்குனது. இங்கே நாங்க ஒன்னும் உங்களை அண்டிப் பிழைக்க வரல. எங்கப்பா டெத்ல எங்களுக்கு கிடைச்ச கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் மனி எல்லாமே பேங்க் அக்கவுண்ட்ல பத்திரமா இருக்கு.
நாங்க ஏன் மாமா கூப்பிட்டதும் ஓடி வந்தோம்னா எங்க அம்மா மாமா, தாத்தா, பாட்டினு எல்லாரைப் பத்தியும் அவ்ளோ உசத்தியா சொல்லிருந்தாங்க. அவங்க மூலமா எங்களுக்கு ஒரு நல்ல குடும்பமும், பாதுகாப்பான வாழ்க்கையும் கிடைக்கப் போகுதுனு தான் நாங்க ரெண்டு பேரும் இங்க வந்தோம். ஆனா வந்த முதல் நாள்லயே உங்கம்மா நாங்க வேற நீங்க வேறனு சொல்லாம சொல்லி எங்களை தனியா அவுட் ஹவுஸ்க்கு அனுப்பிட்டாங்க.
அப்போ இருந்தே எனக்கு நீங்க எல்லாருமே வேத்து மனுஷங்க தான். உங்களை நான் என்னைக்கும் சொந்தமா நெனைச்சதே இல்ல. இனியும் நெனைக்கிறதா இல்ல. நான் இப்பிடி தான்! நாங்க நாங்களாவே இருந்துக்கிறோம். நீங்க நீங்களா இருங்க. எங்களையும் நிம்மதியா இருக்க விடுங்க. மன்னிப்பு மண்ணாங்கட்டினு அடிக்கடி என் கண்ணு முன்னாடி வந்து என்னை எரிச்சல் படுத்தாம இருந்தா அதுவே எனக்கு நீ செய்யுற பெரிய உதவி! எனக்கு வேலை இருக்கு. சோ நீ கெளம்பலாம்” என்றுச் சொல்லி வாசலை நோக்கி கை காட்டியவளை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது என்றே புரியவில்லை ரகுநந்தனுக்கு. அவள் முறைப்பதைக் கண்டதும் மெதுவாக விரிப்பில் இருந்து எழுந்தவன் வாசலை நோக்கிச் சென்றுவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ அந்தப் பார்வையைச் சிறிதும் சட்டை செய்யாமல் அவன் முகத்துக்கு எதிரே கதவை படாரென்று சாத்திவிட்டுச் சென்றாள். ரகுநந்தனுக்கு இவளைச் சமாதானப்படுத்தவே தன்னால் இயலவில்லையே, இந்த லட்சணத்தில் இவளுக்குத் தனது காதலை எவ்வாறு சொல்லிப் புரிய வைக்க முடியும் என்ற ஏக்கம் நெஞ்சில் எழ, அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிதர்சனம் என்று புரிந்தாலும் அவை ரம்பமாய் மாறி மனதில் உண்டாக்கும் ரணத்தைத் தாங்கியபடி தோட்டத்தை நோக்கி நடைப்போட்டான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

