ரகுநந்தன் அன்று நீரஜாட்சியிடம் தான் பேசிய விதம் அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டவன்,
“அது என்னவோ குழந்தைத்தனமா நடந்திண்டா நானும் இப்பிடியா அவளண்ட பேசி வைக்கணும்? நந்து, நோக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வர்றது? உன்னை விட மூணு வயசு சின்னப் பொண்ணு கிட்ட இப்பிடி பேசிருக்கப்படாது தான்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். மறுநாள் காலையில் அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் உறங்கியவன், காலையில் எழுந்ததும் சித்தியிடம் சென்று தான் அவளிடம் மன்னிப்பு கேட்கப் போவதாகச் சொல்ல, மைதிலி அவனைப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு சமையல்கட்டில் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்.
“சித்தி, நேக்கு புரியறது. நான் பேசுன விதம் தப்பு தான். அவளும் அம்மாவைப் பத்தி என்னண்டவே தப்பா பேசலாமோ? ஓகே, நானும் சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். அதுக்குத் தான் சாரி சொல்லப் போறேன் சித்தி” என்று சமையல்கட்டை விட்டு வெளியேற முயன்றவனை வேகமாகத் தடுத்தவர்,

“டேய் கண்ணா, நான் சொல்லுறது நோக்கு இன்னுமா புரியல? இன்னும் பதினாறு நாளைக்கு நீ அவளைப் பார்க்கக் கூடாதுடா. அவா பெரிய மனுஷி ஆயிட்டா” என்றுச் சொல்லிவிட்டு மகனின் புத்திசாலித்தனத்தை எண்ணித் தலையிலடித்துக் கொண்டார் மைதிலி.
அவன் நாக்கைக் கடித்துக் கொண்டவன், “அதுக்குத் தான் சொன்னேளா சித்தி? ஓகே, அவ சரியானதும் நான் போய் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றுச் சொன்னபடி அவனது அறையை நோக்கிச் சென்றான். அதன் பின் அவுட் ஹவுஸ் புறம் அவன் திரும்பி கூடப் பார்க்கவில்லை.
மைதிலி சொன்ன நாள்கணக்கு முடிவுக்கு வந்தாலும், ஹர்சவர்தன் விடுமுறை முடிந்து லண்டன் செல்லத் தயாரானதால், அண்ணனுடன் நேரம் செலவிட்ட ரகுநந்தனுக்கு நீரஜாட்சி விஷயம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நீரஜாட்சியும் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த நாட்களில் அவன் பேச்சை மட்டுமே அசைப்போட்டவள், ‘இனி அவன் முகத்தில் விழிக்கவே கூடாது, முடிந்தவரை சீக்கிரமாகப் படிப்பை முடித்த பிறகு நல்ல வேலைக்குச் சென்று கிருஷ்ணாவை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும்’ என்று மனதில் சபதமிட்டுக் கொண்டாள்.
நாட்கள் கடக்க அவளும் பழையபடி சகஜமாக வெளியே வந்துவிட்டாள். பழையபடி டி-ஷர்ட் பேண்ட் என்றுச் சுத்தாமல் பெரிய ஃப்ராக்கைப் போட்டுக் கொண்டு நடமாடியவளைச் சீதாலெட்சுமி கூடக் கேலி செய்வார்.
அவள் சாதாரணமாக, “எனக்கு இது தான் கம்ஃபர்டபிளா இருக்கு சித்தம்மா” என்றுத் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றுவிடுவாள். மறந்தும் கூட ரகுநந்தன் இருக்கும் திசை பக்கம் கூட அவள் திரும்பவில்லை.
இவ்வாறு இருக்கையில் கிருஷ்ணஜாட்சியின் தேர்வு முடிவு நாளும் வந்தது. காலையிலேயே குளித்துவிட்டுப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றவள், அன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகர் ஸ்பெஷல் அலங்காரத்தில் ஜொலிக்க, அர்ச்சகரிடம் விபூதி குங்குமம் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பாட்டியிடம் பிரசாதம் கொடுப்பதற்காக நேரே வீட்டுக்குள் சென்றாள்.
“சித்தம்மா” என்றபடி உற்சாகமாக உள்ளே வந்தவளின் பார்வையில், காலையில் செய்தித்தாள் படித்தபடி ஹாலில் அமர்ந்திருந்த ஹர்சவர்தன் விழ, ஏற்கனவே ரகுநந்தனின் வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறாமல் இருந்ததால், ‘இவனிடமும் பேசி எதுவும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்’ என்று மெதுவாக நகர முயன்றவளை,
“பாட்டி பின்கட்டுல இருக்கா. நீ கையில என்ன வச்சிருக்க?” என்றவனின் கம்பீரமான குரல் தடுத்து நிறுத்தியது. பிரேக் போட்டது போல் நின்றன அவளது கால்கள்.

தயக்கத்துடன் அவன் புறம் திரும்பியவள், அவன் முகத்தைப் பார்க்காமலே, “கோயில் பிரசாதம். சித்தம்மாக்கு குடுக்கணும்னு வந்தேன்” என்று பட்டும் படாமலும் பேச, ஹர்சவர்தன் செய்தித்தாளை மடித்து வைத்தபடி எழுந்தவன்,
“பகவான் எப்பிடி எல்லாருக்கும் பொதுவானவரோ அதே மாதிரி அவரோட பிரசாதமும் பொதுவானது தான். அதை பாட்டிக்கு மட்டும் தான் குடுத்தாகணும்னு ஏதாவது ரூல் போட்டிருக்கேளா?” என்று கேட்டபடி விபூதி குங்குமத்துடன் குவித்து வைக்கப்பட்டிருந்த அவள் கையைப் பார்த்தான்.
இதற்கு மேல் கொடுக்காமல் இருந்தால் மரியாதையாக இருக்காது என்பதால் கிருஷ்ணஜாட்சி எதுவும் பேசாமல் கையை மட்டும் நீட்ட, அவன் விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். இந்த அழகிய காட்சியைக் கண்டு வீட்டு வாயிலில் சிலையாய் நின்றது ஒரு உருவம். அது வேறு யாருமில்லை, பத்மாவதியின் அண்ணன் மனைவியான விஜயலெட்சுமி தான்.
இதைக் கண்டவரின் மனதில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய, “இந்த ஹர்சா பையன் காரியத்தைக் கெடுத்துடுவான் போல இருக்கே! விஜி, அதுக்குள்ள எதாச்சும் பண்ணி அந்த மதுரவாணியோட பொண்ணை இவன் வாழ்க்கையில வர விடாம பண்ணிடுடி” என்று கறுவியபடி உள்ளே நுழைந்தார்.
அவரைக் கண்டதும் புன்னகைத்தபடி அவரிடம் பிரசாதத்தை நீட்ட, மனதின் கொந்தளிப்பை மறைத்தபடி அவர் விபூதி குங்குமத்தை எடுத்துக் கொள்ள, கிருஷ்ணஜாட்சி பின் கட்டுக்குச் சென்று பாட்டியிடம் பிரசாதத்தை நீட்டியவள், தானும் நீரஜாட்சியும் பிரவுசிங் சென்டருக்குச் சென்று மதிப்பெண் விவரம் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்ல, சீதாலெட்சுமி ரகுநந்தனிடம் இன்டர்நெட் இணைப்பு இருப்பதாகச் சொல்லி அவனை அழைக்க,
“என்ன பாட்டி எதுக்கு கூப்பிட்ட?” என்றபடி பின் கட்டுக்கு வந்தவனை கிருஷ்ணஜாட்சி கண் கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“குழந்தைக்கு இன்னைக்கு ரிசல்ட் வர்றது. அவா ரெண்டு பேரும் பிரவுசிங் சென்டருக்குப் போறேனு சொல்லுறா. உன் ரூம்ல தான் கம்ப்யூட்டர் இருக்கே! நீ கொஞ்சம் சிரமம் பார்க்காம ரிசல்ட்டைப் பார்த்துச் சொல்லுடா கண்ணா” என்று பேரனின் நாடியைப் பிடித்துக் கொஞ்சியவரைத் தவிப்புடன் பார்த்த கிருஷ்ணஜாட்சி அவசரமாக,
“வேண்டாம் சித்தம்மா. அவருக்கு ஏன் கஷ்டம்? நாங்க ரெண்டு பேரும் பிரவுசிங் சென்டருக்குப் போயே பார்த்துக்கிறோம்” என்று மறுத்தாள்.
சீதாலெட்சுமி அவளைக் கண்டித்தபடி அவளது பதிவெண்ணை ரகுநந்தனுக்கு எழுதிக் கொடுக்கும் படி ஆணையிட, அவளும் வேறு வழியின்றி எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அவுட் ஹவுஸிற்குள் வரும் போதே மைத்ரேயியுடன் பேசிக் கொண்டிருந்த நீரஜாட்சியின் குரல் காதில் விழுந்தது.
“மைத்திக்கா உன்னோட காலேஜிலயே கிருஷ்ணாவும் படிச்சா நல்லா இருக்கும். நீ அவ கூடவே இருப்பல்ல” என்க, மைத்ரேயியும் அதை ஆமோதித்தாள்.
“ஒரு பிரச்சனையும் இல்லடி நீரு. நம்ம ரெண்டு பேரும் போய் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிண்டு வருவோம். இன்னைக்கே எங்க காலேஜ்ல குடுக்க ஆரம்பிச்சிடுவா. ஆமா கிருஷ்ணா இன்னுமா பிள்ளையாரைச் சுத்திண்டிருக்கா?” என்றுச் சந்தேகமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தவளைக் கண்டதும் மைத்ரேயி உற்சாகமாக,
“நம்ம மூணு பேரும் பிரவுசிங் சென்டருக்கு போலாமாடி கிருஷ்ணா?” என்றபடி எழும்பினாள்.
கிருஷ்ணஜாட்சி, “இல்ல மைத்திக்கா! சித்தம்மா வீட்டிலயே பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்க, மைத்ரேயி அப்போது தான் நினைவு வந்தவளாக,
“ஆமா! நந்து ரூம்ல இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கே” என்றுச் சொல்லிவிட்டு, “நான் போய் பார்த்துட்டு உன்னோட மார்க்கை எழுதிண்டு வர்றேன்டி” என்றபடி வீட்டிற்குள் ஓடினாள்.
கிருஷ்ணஜாட்சி யோசனையுடன் இருப்பதைக் கண்ட நீரஜாட்சி, “என்னாச்சு கிருஷ்ணா? நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே? ரிசல்ட்டை நெனைச்சு பயப்படுறியா?” என்று கேட்க,
கிருஷ்ணஜாட்சி அதை மறுத்தவளாய், “இல்லடி நீரு! என் கவலையே இதுக்கு அப்புறம் என்ன செய்யப் போறேனு தான்” என்று பெருமூச்சுடன் கூறிவிட்டு, கைவிரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி குனிந்து அமர்ந்திருந்தாள்.
யோசனையுடன், “நான் ஹையர் ஸ்டடீஸ் படிக்கணும்னா நம்ம கிட்ட இப்போ பணம் இல்ல. அதுக்கு மாமா கிட்ட இல்லனா தாத்தா கிட்ட தான் ஹெல்ப் கேக்கணும். பட் அதுக்கும் மாமியும், அவங்க பசங்களும் நம்மளை எதாச்சும் குத்தலா பேசுவாங்களோனு எனக்குத் தயக்கமா இருக்குடி” என்றுச் சொல்ல, நீரஜாட்சியும் அதை எண்ணிச் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அதற்குள் வீட்டில் இருந்து, “கிருஷ்ணா இங்கே கொஞ்சம் வாடி” என்ற மைத்ரேயியின் குரல் கேட்க, இருவரும் வேகமாக ஓடிச் சென்றனர்.
அங்கே ஹாலில் மைத்ரேயி கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு அதை யாரிடமும் காட்டாமல் மறைத்தபடி ஓட, ஸ்ருதிகீர்த்தி அதை அசூசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணஜாட்சி உள்ளே நுழைந்தவள் நீரஜாட்சியை அழைக்க, அவள் தான் வரவில்லை என்றுச் சொன்னபடி வாசலிலேயே நின்று கொண்டாள்.
மைத்ரேயி கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் அவள் அருகில் வந்தவள், அவளிடம் பேப்பரை விரித்துக் காட்ட அவளுக்குச் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. அவள் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் செய்திருக்க, மைத்ரேயியை அணைத்துக் கொண்டாள் அவள். அதற்குள் அந்தப் பேப்பரைப் பிடுங்கிய மைதிலி, மருமகள் வாங்கிய மதிப்பெண்களை வீட்டில் அனைவரிடமும் காட்ட, பத்மாவதியோ, “படிப்பில சூட்டிகையா தான் இருக்கு. எப்பிடியோ படிச்சு முன்னேறுனா சரி தான்” என்று மட்டும் எண்ணிக்கொண்டார்.
ஆனால் அவரின் அருகில் அமர்ந்திருந்த விஜயலெட்சுமிக்கு இந்தச் செய்தி உவப்பாக இல்லை. மகிழ்ச்சியில் இன்னும் அழகாகத் தெரிந்த கிருஷ்ணஜாட்சியைப் பார்த்தவர் மனதில் பொறுமிக் கொண்டார்.
அதற்குள் பட்டாபிராமன் நீரஜாட்சியிடம் பேசிக் கொண்டே இரு பேத்திகளின் அருகில் வந்தவர், அவருடன் வந்த நண்பரிடம் மூத்த பேத்தியைப் பற்றிச் சிலாகித்தது அவர் காதில் விழ இன்னும் எரிச்சலானார்.
“என் மூத்த பேத்தி கிருஷ்ணஜாட்சி இவ தான். பொதுவா பகவான் அழகைக் குடுத்துட்டா அறிவைக் குடுக்க மறந்துடுவார். ஆனா என் பேத்திக்கு அழகோட சேர்த்து அறிவையும் வாரி வழங்கிருக்கார்டா சேஷா! எவ்ளோ மார்க் வாங்கிருக்கா பார்த்தியோ?” என்று பெருமை பேச,
அவரின் நண்பரான சேஷன், “சரிடா பட்டு. உன் பேரப்பிள்ளைங்க எல்லாமே படிப்பில கெட்டி தான். ஹர்சாவுக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருப்பாடா” என்று மனமுவந்து கூற, விஜயலெட்சுமிக்குத் தன் மனக்கோட்டை மீது இடி விழுந்தது போன்ற பிரம்மை.
மனதிற்குள், “இவ பார்க்கறதுக்கு வேற இவளை பெத்தவளாட்டம் அழகா இருந்து தொலைக்கறா. இந்த லெட்சணத்துல இவ படிக்க மட்டும் செஞ்சிட்டாளோ இவளோட பாட்டனாரைக் கையில பிடிக்க முடியாதே. இந்தச் சேஷன் மாமா சொன்ன மாதிரி இந்தக் கிழவர் பேரனுக்கும், பேத்திக்கும் முடிச்சு போட பிளான் பண்ணிட்டாரோ என்னவோ? ஆனா நான் இருக்கிற வரைக்கும் இதை நடக்க விடமாட்டேன். இந்த ஸ்ரீநிவாசவிலாசத்தோட மாட்டுப்பொண்ணா என் வர்ஷா வரணும்னா, இந்தக் கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லனு எல்லாரோட மனசிலயும் தோண வைச்சே ஆகணும்” என்று சூளுரைத்தார் அவர்.
அனைவரும் கிருஷ்ணஜாட்சிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைப் பத்மாவதி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது வேறு விஜயலெட்சுமிக்குச் சரியாகப் படவில்லை. நாத்தனாரைக் குழப்பி விட்டால் மட்டுமே தான் நினைத்தது நடக்கும் என்று எண்ணியவர்,
அவர் காதில் “என்ன பத்மா? நோக்கும் அந்தப் பொண்ணைப் பிடிக்க ஆரம்பிச்சிடுத்து போல” என்க, பத்மாவதி புரியாமல் அண்ணனின் மனைவியைப் பார்த்தார்.
விஜயலெட்சுமி அவரது முகத்தைத் திருப்பி, கிருஷ்ணஜாட்சிக்குக் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லும் ஹர்சவர்தனைக் காட்டியவர், “உன் மாமனாரோட நிக்கிறார் இல்லையா சேஷன் மாமா, அவர் என்ன சொன்னார்னு தெரியுமோ நோக்கு? அந்த கிருஷ்ணாவும், நம்ம ஹர்சாவும் சரியான ஜோடியாம். அதுக்கு உன் மாமனாருக்குப் பெருமை பிடிபடலடி. என்னோட பேத்திக்கு பகவான் அழகோட அறிவையும் சேர்த்துக்கொடுத்திருக்கார்னு ஒரே பெருமை” என்றுச் சொல்லி உதட்டைச் சுழிக்க, பத்மாவதி புருவம் நெறிய அவரைப் பார்த்தார்.
“மன்னி! அதுங்க ரெண்டும் படிச்சு எதாச்சும் ஜோலியில உக்காந்ததுனா நம்மாத்தை விட்டு போயிடுங்கள்! நான் அதனால தான் பெருசா கண்டுக்கறதில்ல” என்றவரின் கூற்றை மறுத்த விஜயலெட்சுமி,
“நோக்கு விவரம் பத்தாதுனு தெரிஞ்சுண்டு தான் உங்காத்துக்காரர் தங்கைப்பொண்ணுகளை ஆத்தோட தங்க வச்சிண்டிருக்கார்டி பத்மா. அவா திட்டம் இன்னுமா நோக்கு பிடிபடல? அந்தப் பொண்ணு பார்க்கறதுக்கு அம்சமா குத்துவிளக்காட்டம் இருக்கா. அவ மட்டும் படிச்சி பெரிய ஜோலிக்குப் போனானு வையேன், உங்காத்துக்காரரும், மாமனாரும் அவளை ஹர்சாவுக்கு விவாகம் பண்ணி வச்சு உன்னோட மாட்டுப்பொண்ணா மாத்திடுவா” என்று ஏற்றிவிட, பத்மாவதிக்கு அவ்வாறு நடந்து விடுமோ என்ற பீதி கண்ணில் தெளிவாகத் தெரிந்தது.
முகத்தைச் சுழித்தபடி, “என்ன பேசறேள் மன்னி? இப்பிடி போறது வர்றதுகளெல்லாம் எங்காத்து மாட்டுப்பொண்ணா வர்ற அளவுக்கு ஒன்னும் இந்த ஸ்ரீநிவாசவிலாசத்தோட தரம் கொறஞ்சு போயிடல்ல. நான் உயிரோட இருக்கற வரைக்கும் அந்த மதுரவாணியோட பொண்ணுங்க ரெண்டு பேரும் இந்த ஆத்துக்குள்ள வரவே விடமாட்டேன்” என்று வஞ்சினத்தோடு உரைத்தார் பத்மாவதி.
தான் பற்ற வைத்தது எரிய ஆரம்பித்திருப்பதைத் திருப்தியோடு பார்த்த விஜயலெட்சுமி, “இப்போ தான் நீ என்னை புரிஞ்சிண்டிருக்க பத்மா. நீ நெனைச்சது நடக்கணும்னா முதல்ல அந்தக் கிருஷ்ணஜாட்சிக்கு இந்த ஆத்துல அவா ரெண்டு பேரோட நிலை என்னன்னு புரிய வை. முக்கியமா அவா இஷ்டத்துக்குப் படிச்சு உன் கையை மீறிப் போயிடக் கூடாதுடி. உன்னோட சட்டகர் அன்னைக்கு சொல்லிண்டிருந்தாரே கிருஷ்ணாவோட கையில அன்னபூரணி குடியிருக்கானு” என்றுச் சொல்லிவிட்டு அர்த்தபுஷ்டியோடு பத்மாவதியைப் பார்க்க,
அவர் “நேக்கு புரியறது மன்னி. இனிமே நடக்கப் போறத வேடிக்கை மட்டும் பாருங்கோ” என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஒரு வழியாகத் தேர்வு முடிவு வந்த களேபரங்கள் முடிந்து எல்லாரும் அவரவர் அறைக்குத் திரும்ப, மைத்ரேயி நீரஜாட்சியை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்கச் சென்றுவிட்டாள்.
மைதிலி ஸ்ருதிகீர்த்திக்குக் கையில் மருதாணி இட்டுக் கொண்டிருக்க, ரகுநந்தனும், ஹர்சவர்தனும் லேப்டாப்பில் எதையோ பார்த்துத் தீவிரமாக வாதிட்டுக் கொண்டிருந்தனர். பத்மாவதி அனைவரையும் நோட்டமிட்டவர், மறக்காமல் மாமனார் மாமியார் ஓய்வு எடுக்கிறார்களா என்பதையும் கவனித்துவிட்டு ஒரு முடிவோடு அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்டார்.
உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே மனதிற்குள், “பகவானே, நான் சுயநலமா யோசிச்சிண்டிருக்கேனு நேக்கு நன்னா புரியறது. ஆனா நேக்கு வேற வழியில்ல. நேக்கு பிடிக்காதவளோட பொண்ணு என்னை அதிகாரம் பண்ணிடக் கூடாதேங்கிற ஆதங்கம் தான் நான் செய்யப் போற கொடும்பாவத்துக்குக் காரணம். என்னை மன்னிச்சிடு நாராயணா” என்று வேண்டிக் கொண்டே ஹாலுக்குள் நுழைய, அங்கே கிருஷ்ணஜாட்சியின் சமையலின் மணம் அவரது நாசியை இதமாக வருடிச் சென்றது.
அதைச் சுவாசித்தபடி உள்ளே வந்தவரை கிருஷ்ணஜாட்சியும் பார்த்துவிட்டாள். புன்னகையுடன் “வாங்க மாமி. உக்காருங்க” என்று அமரச் சொல்ல, பத்மாவதி மனதிற்குள் நெருடினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்தார். அமர்ந்தவர் அவளிடம் படிப்பு விஷயத்தைக் கேட்டுவிட்டு வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவது போல ஆரம்பித்தார்.
“நேக்கு மதுரவாணியைப் பிடிக்காதுங்கிறது என்னவோ உண்மை தான்டிம்மா! ஆனா அவ கிட்ட நேக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னு தெரியுமோ? அவளோட சுயமரியாதை. என்னைக்கும் யாரண்டவும் பணிஞ்சுப் போகாத சுயமரியாதைக்குச் சொந்தக்காரியாக்கும் அவ. ஆனா அவ பெத்த பொண்ணுங்களான நீங்க சுயமரியாதைன்னா கிலோ என்ன விலைனு கேப்பேள் போல” என்று கேலியாக அவளைப் பார்க்க, அந்தப் பார்வை கிருஷ்ணஜாட்சியின் உள்ளத்தைச் சுருக்கென்று தைத்தது.
“புரியலையாடிம்மா? ஏதோ பெத்தவா இல்லாம சாப்பாட்டுக்குச் சிரமப்படுறேள்னு உங்க மாமாவும், தாத்தாவும் உங்களுக்கு ஆதரவு கொடுத்தா, நீங்க ரெண்டு பேரும் அவா முதுகிலே ஏறிச் சவாரி பண்ணுவேள் போல இருக்கே.”
“மாமி, நீங்க சொல்ல வர்றதை நேரா சொல்லுங்க.”
“கெட்டிக்காரி! சரி, நானும் சுத்தி வளைக்காம சொல்லிடுறேன். இந்த ஸ்ரீநிவாசவிலாசத்தோட ஒவ்வொரு செங்கலும் என் ஆத்துக்காரர், என் சட்டகரோட உழைப்பைச் சொல்லும்டிம்மா. எங்காத்து குழந்தேளுக்கு படிப்புக்கு மட்டுமே மாசமானா எவ்ளோ செலவாகறதுனு நோக்கு தெரியுமா? இந்த நிலையில கூட ரெண்டு டிக்கெட்டையும் ஆத்துக்கு இழுத்துண்டு வந்தா யாரு அவா செலவை எல்லாம் பாக்கறது? நானும் நீ மதுரவாணியாட்டம் சொந்தமா உழைச்சு உன் தங்கையைப் படிக்க வைப்பேனு நெனைச்சிண்டிருந்தேன். ஆனா நீயும் எங்காத்தை அண்டிப் பிழைக்க……” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தது கிருஷ்ணஜாட்சியின் குரல்.
“போதும் மாமி! எனக்குப் புரியுது. இனி என்னோட நீரஜாவோட செலவுக்கு நாங்க உங்களையோ, மாமா, தாத்தாவையோ எதிர்பார்க்க மாட்டோம். நான் ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போய் என் தங்கச்சிக்கு வேண்டியதை வாங்கிக் குடுத்துக்கிறேன். இதுவரைக்கும் நீங்க எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப அதிகமாவே செஞ்சிட்டீங்க” என்று தெளிவாகச் சொல்லி முடிக்க, பத்மாவதிக்கு பரமதிருப்தியாக இருந்தது. உண்மையில் அவருக்குச் செலவைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.
சென்னையில் மட்டுமே நான்கு கிளைகளைக் கொண்ட ‘ஸ்ரீநிவாசவிலாஸ்’ ஹோட்டல் உரிமையாளரின் மனைவியான அவருக்கு இந்தச் செலவு எல்லாம் கால் தூசிக்குச் சமானம். ஆனால் அவருடைய கவலையோ, எங்கே கிருஷ்ணஜாட்சி படித்து விட்டால் கணவரும், மாமனாரும் அவளைத் தன்னுடைய மகனின் தலையில் கட்டிவிடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.
அவளுடைய முடிவு மனதுக்கு இதமளிக்க அவளது கூந்தலை வருடியபடி, “சின்னப் பொண்ணா இருந்தாலும் நோக்கு பெரிய மனசுடிம்மா. நீ ஏன் எங்கேயோ போய் வேலை செய்யணும்? நமக்குச் சொந்தமா நாலு ஹோட்டல் இருக்கு. உன் மாமா அடிக்கடி சொல்லுவார் கிருஷ்ணஜாட்சியோட கையில அன்னபூரணி வாசம் பண்ணுறான்னு. அந்த அன்னபூரணியோட சேவை கொஞ்சம் நம்ம ஹோட்டலுக்கும் கிடைக்கட்டுமே” என்றுச் சொல்ல, கிருஷ்ணஜாட்சி அதிர்ச்சியாய் அவரைப் பார்த்தாள்.
அவளது அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவர், “என்னடா மாமி நம்மளைச் சமையல்காரியா போகச் சொல்லுறாளேனு பார்க்கறயா? உண்மையா உன்னை வெளி வேலைக்கு அனுப்பி நீ வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிண்டு இருக்க முடியாதுடிம்மா என்னால. இந்த ஊர்ல உன்னை மாதிரி கண்ணுக்கு அம்சமான பொண்ணை மூணாவது மனுஷன் கிட்ட ஜோலிக்கு அனுப்பிட்டு நாங்க தவிச்சிண்டு இருக்கணும், அதனால தான் நம்ம ஹோட்டல்ல உன்னை வேலைக்குப் போகச் சொல்லுறேன். அங்கேன்னா உன்னோட மாமா ரெண்டு பேரும் இருப்பா. அவா நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்குப் போயிட்டாலும் சேஷன் மாமா நோக்கு உதவியா இருப்பார். அங்கே உன்னை மரியாதையா நடத்துவா. இதெல்லாம் யோசிச்சு தான் நான் உன்னண்ட பேச வந்தேன்” என்றுச் சொல்ல, கிருஷ்ணஜாட்சியால் மாமியின் சாமர்த்தியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

கிருஷ்ணஜாட்சிக்குமே தானும், தங்கையும் மாமாக்களின் தயவில் இருப்பது பிடிக்கவில்லை. ஏற்கனவே மாமி மற்றும் மாமாவின் சீமந்தப் புத்திரர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்திருந்தவள், சிறிது நாட்களாகவே ஏதாவது வேலைக்குச் சென்று தங்களுடையச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவள், அன்று காலையில் மதிப்பெண் பட்டியலைப் பார்த்ததும் மேற்கொண்டு படிக்கலாமோ என்று ஆசைப்பட்டதும் உண்மையே.
ஆனால் மாமியின் சொற்கள் அவளுக்கு ஆசைப்படுவதற்குத் தகுதியில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல, அவளுக்குமே இப்போது இருக்கும் நிலையில் தான் மாமி கூறியபடி அவர்களின் ஹோட்டலுக்கே வேலைக்குச் செல்லலாம் என்று தோன்றிவிட்டது.
மனதில் சிறு வலியுடன் கிருஷ்ணஜாட்சி அவர் சொன்ன ஏற்பாட்டுக்குச் சம்மதம் தெரிவிக்க, பத்மாவதி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவர் அவளது நாடியைக் கிள்ளி முத்தமிட்டுவிட்டு வீட்டை நோக்கிச் சென்றார்.
இனி கணவரோ மாமனாரோ கிருஷ்ணஜாட்சியையும் ஹர்சவர்தனையும் வாழ்க்கையில் ஒன்று சேர்க்க நினைத்தால், “ஒரு சமையல்காரியை என் பிள்ளை தலையில கட்டப் பார்க்கிறேளே?” என்றுச் சொல்லித் தடுத்துவிடலாம் என்ற குதூகலத்துடன் இதைத் தனது அண்ணனின் மனைவிக்குத் தெரிவிக்க ஆவலுடன் வீட்டுக்குள் சென்றார் பத்மாவதி.
தனது திட்டம் ஜெயித்ததாக எண்ணி மகிழ்ச்சியுடன் சென்றவரைப் பார்த்து விதி கேலியாகக் கைகொட்டிச் சிரித்ததை அவர் அறிய வாய்ப்பில்லை. யாருக்கு யார் என்று இறைவன் எழுதி வைத்த பிறகு மானிடர்களின் திட்டங்கள் அனைத்துமே செல்லாக் காசுகள் தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

