ஒருவாறு அனைத்துக் கலவரங்களும் அடங்கி, மாலையில் சேஷன் கிருஷ்ணஜாட்சியின் கைப்பட நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ஸ்ரீநிவாசவிலாசத்திலிருந்துப் புறப்பட்டு விட்டார். பட்டாபிராமன் கும்பகோணத்திலிருக்கும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து கிருஷ்ணஜாட்சியின் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கொடுக்கப்படும் என்பதை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அக்கடாவென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துவிட்டார்.
இன்று ஒரு நாளில் மட்டும் தன் கணவருக்குத் தான் எத்தனை மனவேதனை என்ற வருத்தத்துடன் அவரருகில் அமர்ந்தார் சீதாலெட்சுமி.
“ஏண்ணா! ரொம்ப களைப்பா தெரியறேளே? முடியலையா?” என்று ஆதரவாகக் கேட்க, சகதர்மிணியின் குரலைக் கேட்டதும் இவ்வளவு நேரம் விழிமூடி ஊஞ்சலில் சாய்ந்திருந்தவர் கண்ணைத் திறந்தார்.
சீதாலெட்சுமியின் கவலைத் தோய்ந்த முகத்தைப் பார்த்ததும் அதைப் போக்க விழைந்தவராய்,
“இல்லடி சீதே! நேக்கென்னடி, நன்னா தான் இருக்கேன். ஒரு வழியா பேத்திகள் ரெண்டு பேரோட பிரச்சனைக்கும் தீர்வு கண்டுட்டேனோ இல்லையோ? அந்த நிம்மதி தான். வேற ஒன்னுமில்லடி நேக்கு” என்றுச் சொல்ல,
சீதாலெட்சுமியும் பெருமூச்சு விட்டபடி, “அவா படிப்புக்கு எந்தக் குந்தகமும் வராதுண்ணா இனி. ஆனா இன்னைக்குக் காத்தாலே நம்மாத்துல கூடத்துல கண்ட காட்சியை வச்சு நேக்கு ஒன்னு தோண்றது. சொன்னா நீங்க கோவிச்சிக்கப்படாது!” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க,
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பட்டாபிராமன் “நான் கோவிச்சிக்கிற மாதிரி இதுவரைக்கும் நீ எதையும் சொன்னதில்லையேடி” என்று மனைவியை மெச்சிக் கொண்டார்.
கணவரின் மெச்சுதல் கொடுத்த நம்பிக்கையில் சீதாலெட்சுமி, “இன்னைக்குக் காத்தாலே கிருஷ்ணா நேக்கு சுவாமியோட பிரசாதத்தைக் குடுக்க வந்தாண்ணா! அப்போ நம்ம ஹர்சா அவளண்ட பேச்சு குடுத்துப் பிரசாதத்தை வாங்கிண்டான். அவா ரெண்டு பேரையும் பாக்கறச்ச நேக்கே கண்ணு பட்டுடும் போல! ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கறதுண்ணா. இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சுப் பேசாம அவா ரெண்டு பேருக்கும் விவாகம் பண்ணி வச்சிட்டா நம்ம பேத்தியும் நம்ம கண்பார்வையிலேயே இருப்பாளோன்னோ?” என்று தனது உள்மனக்கிடக்கையை வெளிப்படுத்த, பட்டாபிராமனோ ‘ஏன் உனக்கு இந்த விபரீத ஆசை?’ என்றபடி மனைவியைப் பார்த்து வைத்தார்.

மாலை நேரம் என்பதால் தோட்டத்தில் பிச்சிக்கொடியில் மலர் கொய்ய வந்திருந்த பத்மாவதியின் காதில் இந்தச் செய்தி விழுந்ததும், அவர் நெஞ்சில் சிறு பூகம்பமே வந்துவிட்டது.
எது நடக்கக்கூடாது என்று அவர் அரும்பாடு பட்டாரோ அது நடந்தே விடும் போல இருக்கிறதே என்ற பதபதைப்புடன், மாமனாரின் பதிலை எதிர்பார்த்தபடி தடதடத்த இதயத்தோடு பிச்சிக்கொடி இருந்த புதரின் பின்னே மறைந்துகொண்டு அவர்களின் பேச்சைக் கேட்கத் தொடங்கினார் அவர்.
பட்டாபிராமன் அவரது மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்தபடி, “உன் பேரனுக்கு விவாகம் பண்ணி வச்சு என் பேத்தியை நானே பாழுங்கிணத்துல தள்ள மாட்டேன்டி சீதே. நோக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கறதா? அவன் பத்மாவதியோட பிரதிபிம்பம்டி. ரூபத்திலயும் சரி, குணத்திலயும் சரி உன் மூத்த மருமாளைக் கொண்டிருக்கான்டி அவன். அவனை என் கிருஷ்ணாவுக்குக் கட்டி வச்சு அவ வாழ்க்கையைப் படுகுழியில தள்ள என்னால முடியாதுடிம்மா. என் பேத்திக்குன்னு பிறந்த ராஜகுமாரன் வருவான். அவனுக்கு நானே அவளைத் தாரை வார்த்துக் குடுப்பேனே தவிர, உன் பேரனுக்கு அவளை விவாகம் பண்ணி வைக்கணும்கிற எண்ணம் எனக்குத் துளி கூட இல்லடி” என்று பிடிவாதமான குரலில் சொல்ல, சீதாலெட்சுமி மனமின்றி தலையாட்டி வைத்தார்.
பிச்சிக்கொடியின் பின்னே நின்ற பத்மாவதிக்கு இப்போது தான் உயிரே வந்தது. ‘அவளை எந்த ராஜகுமாரனும் வந்து அழைத்துச் செல்லட்டும், என் மகனுக்கு அவள் தேவையில்லை’ என்பதே அவரது எண்ணம். எண்ணம் ஈடேறிய மகிழ்ச்சியில் அரவமின்றி வீட்டை நோக்கி நடைப்போட்டார் பத்மாவதி.
அன்றைய இரவுணவின் போது மீண்டும் பட்டாபிராமன் தன்னுடைய பேத்திகளின் விஷயத்தில் யாரும் தேவையின்றி மூக்கை நுழைக்கக் கூடாது என்று ஆணையிட, அவரது ஆணையை மீறும் தைரியம் இதுவரைக்கும் அந்தக் குடும்பத்தாருக்கு இல்லாததால் யாரும் அவர்கள் விஷயத்தில் தலையிடவில்லை.
கிருஷ்ணஜாட்சி படிக்கச் சம்மதித்த மகிழ்ச்சியில் நீரஜாட்சியுமே மாமா வீட்டின் அற்பப்பதர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். கிருஷ்ணஜாட்சியின் நாட்கள் மைத்ரேயி, தாத்தா பாட்டியுடன் கழிய, நீரஜாட்சி அவளுடைய நண்பர்களான பொடிப்பையன்களுடன் கிரிக்கெட் ஆடிப் பொழுதைக் கழித்தாள்.
இவ்வாறு இருக்க அவளது தேர்வு முடிவும் வந்துவிட்டது. அவளுமே நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க, அவள் வணிகவியலைப் படிக்கப் போவதாகக் கூறிவிட்டாள். பட்டாபிராமன் இருவரையும் ஒருநாள் தஞ்சாவூர் அழைத்துச் சென்று அவர்களின் மதிப்பெண் சான்று மற்றும் டி.சி.-யை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
இதற்கிடையில் ஹர்சவர்தன் லண்டன் சென்றுவிட, ரகுநந்தன் அவனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கால்பந்தாட்ட பயிற்சி என்று அவனை பிஸியாக வைத்துக் கொண்டான். மீதமிருந்த நேரத்தில் ஸ்ருதிகீர்த்தியோடு வம்பிழுத்து அவளை அழ வைத்தான். தப்பித் தவறிக் கூட அவனது பார்வை அவுட் ஹவுஸ் பக்கம் திரும்பவில்லை.
அவ்வப்போது நீரஜாட்சியைத் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது பார்க்க நேரிட்டாலும், இவனைக் கண்டதும் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்வதால் அவனுமே அவளைச் சீண்டுவது இல்லை. இதுகுறித்து ஸ்ருதிகீர்த்தி வேண்டுமென்று அவனை வம்பிழுத்தால்,
“ஏய், அவளுக்கு ஏதோ ஒரு காரணத்தால என்னைப் பிடிக்காம போயிடுத்துடி. நம்மளைப் பிடிக்காதவா முன்னாடி ஏன்டி போய் நிக்கணும்? நேக்குமே யாரும் என்னைப் பார்த்து முகம் சுழிச்சிண்டு போனா பிடிக்காது. அந்த குட்டிப்பிசாசு என்னைப் பார்த்தாலே ஏதோ விஷத்தைப் பார்க்கற மாதிரி மொறச்சிண்டு போறதே நேக்கு ஒரு மாதிரி இருக்கறது. இதுல நான் ஏன்டி வழியப் போய் சனியனைத் தூக்கி என் பனியன்ல போட்டுக்கணும்? நோக்கு தைரியம் இருந்தா அவளண்ட போய் பேசேன்” என்று பதிலுக்கு அவளைக் கோர்த்து விட முயல்வான்.
ஸ்ருதிகீர்த்தியோ, “முடியாதுடா அண்ணா! அவா கையில இருக்கற பேட்டைப் பார்த்தியோன்னோ? பீமனுக்கு கதாயுதம் மாதிரி அந்த நீரஜாட்சிக்குக் கிரிக்கெட் பேட். நாளைக்கே நான் அவளைக் கேலி பண்ணி அவ கோவத்துல அந்தப் பேட்டால என் மண்டையை உடைச்சு வச்சாலும் தாத்தால இருந்து அப்பா வரைக்கும் அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா. நேக்கு இது தேவையா?” என்றுச் சொல்லிவிட்டு நழுவி விடுவாள்.
இப்படி இருக்க கல்வியாண்டு ஆரம்பிக்கவே, கிருஷ்ணஜாட்சி அவளது Baking and Patisserie Diploma-விலும், நீரஜாட்சி அவளது பதினோராம் வகுப்பிலும் அடியெடுத்து வைத்தனர். ரகுநந்தன், ஸ்ருதிகீர்த்தி மற்றும் மைத்ரேயி மூவரும் ஒரே கல்லூரி என்பதால் அவர்களுக்கும் கல்லூரி திறக்கும் நாள் வந்துவிட இளையவர்கள் எவருமின்றி வீடு அமைதியாக இருந்தது.
நீரஜாட்சி நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் அவளது வகுப்பில் அவளுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. ஆனால் அது பணக்கார மாணவர்கள் படிக்கும் பள்ளி என்பதால் பெரும்பாலான மாணவர்கள் அதற்கேற்ற அதிகாரத்துடனே நடந்து கொண்டனர். அவர்களில் இருந்து தனித்து தெரிந்தது ஒரே ஒரு பெண் தான். அவள் வந்ததில் இருந்தே யாரிடமும் கலந்துப் பேசாமல் தனித்திருக்க, நீரஜாட்சி தானாகவே அவள் அருகில் சென்று அமர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அந்தப் பெண்ணும் ஒரு புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவள் பெயர் கவிதா என்றும், பெற்றோர் இருவரும் ரயில்வே ஊழியர்கள் என்பதால் அடிக்கடி பணியிடை மாற்றம் காரணமாக அவளது கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தன்னை விடுதியில் சேர்த்துவிட்டார்கள் என்று சோகம் ததும்பக் கூற, அவளும் தன்னைப் போலப் பெற்றோரை நினைத்து ஏங்குகிறாள் என்றதும் நீரஜாட்சி உருகிப் போய்விட்டாள். அவளுக்கு ஆறுதல் சொன்னதோடு சிறிது நேரத்திலேயே அவளைச் சிரிக்கவும் வைத்து கலகலப்பாக அவளை உரையாட வைத்துவிட, கவிதாவுக்குமே அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
அதே நேரம் கிருஷ்ணஜாட்சி இன்ஸ்டிடியூட்டில் நுழைந்தவள், அன்று அறிமுக வகுப்பு என்றாலும் கூட ஒருவித பதற்றத்துடனே இருக்க, முழங்காலை விட சிறிது நீளமான ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு, பால் வெள்ளை நிற சருமத்துடன், கருமையா பொன்னிறமா என்று வரையறுக்க முடியாத கூந்தலுடன் அவள் அருகில் வந்து நின்றாள் ஒரு பச்சைநிற கண்ணழகி.
பதற்றத்துடன் அமர்ந்திருந்த கிருஷ்ணஜாட்சியைப் பார்த்தவள், “ஹலோ பியூட்டிஃபுல்! கேன் யூ பிளீஸ் மூவ் அ லிட்டில்?” என்றுச் சொல்லிவிட்டுத் தன் பெருவிரலால் அவளுக்கு அடுத்தது தன்னுடைய இருக்கை என்று சுட்டிக்காட்ட, அவளது முகத்தில் இருந்த சினேகபாவத்தைக் கண்டதும் கிருஷ்ணஜாட்சியின் முகமும் மலர, எழுந்து அவள் உள்ளே செல்வதற்கு வழிவிட்டாள்.
அந்தப் பெண் உள்ளே சென்று அமர்ந்ததும் கிருஷ்ணஜாட்சியிடம், “ஐயாம் கரோலின் தாமஸ். உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா?” என்று கொஞ்சும் தமிழில் வினவ,
கிருஷ்ணஜாட்சி புன்னகையுடன் “ஐயாம் கிருஷ்ணஜாட்சி மதிவாணன்” என்றுச் சொல்ல, அவளால் அந்தப் பெயரை முழுமையாக உச்சரிக்க இயலவில்லை.
அவளது சிரமத்தைப் போக்க, “மே ஐ கால் யூ கிரிஷ்? பிகாஸ் ஐ கேன் ஸ்பீக் தமிழ் புளூயண்ட்லி. ஐயாம் பிரம் அன் ஆங்கிலோ இந்தியன் பேமிலி” என்றுச் சொல்ல, கிருஷ்ணஜாட்சிக்குக் கரோலினின் கிளிப்பேச்சுக்கும், பச்சைநிறக் கண்களுக்குமான அர்த்தம் அப்போது விளங்கியது.
“நோ பிராப்ளம்” என்று கிருஷ்ணஜாட்சியும் சிரிக்க, அப்போது “ஹலோ யங் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்” என்ற கூவலுடன் அவர்களுக்கு வகுப்பு எடுப்பவர் வந்துவிட, அதற்குப் பிறகு வகுப்பு சுவாரசியமாகச் சென்றது. கிருஷ்ணஜாட்சிக்குத் தான் மற்றவர்களைப் போலக் கல்லூரிக்குச் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது புரியாவிட்டாலும், அந்த இன்ஸ்டிடியூட்டும், அவளுக்குக் கிடைத்த புதிய தோழியும் அவளது மனதை இலகுவாக மாற்றிவிட்டனர். அதனால் அவளுக்கு அன்றைய பொழுது உற்சாகமாகக் கழிந்தது.

மதியம் வகுப்பு முடிந்து கிளம்பும் போது கரோலின் அவளைத் தானே டிராப் செய்துவிடுவதாகக் கூற, கிருஷ்ணஜாட்சியும் மாமாவின் ஹோட்டல் பெயரைச் சொல்ல,
“வாவ்! அது சிட்டியில ரொம்ப ஃபேமஸான ஹோட்டல். பட் பியூர் வெஜிடேரியன் வெரைட்டீஸ் மட்டும் தான் அங்கே இருக்கும்” என்றபடி கரோலின் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
கிருஷ்ணஜாட்சி அது தன்னுடைய மாமா நடத்தும் ஹோட்டல் என்றும், தான் இன்றிலிருந்து அங்கே பணிபுரியப் போவதாகவும் சொல்ல, கரோலின் அவளுக்கு வாழ்த்துத் தெரிவித்தபடி இறக்கிவிட்டாள். அவளைக் கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றவள், மறக்காமல் மாமாக்களிடமும், தாத்தாவிடமும் புதிய சினேகிதியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அவர்கள் ஜூஸ் குடித்துவிட்டுத் தான் கிளம்ப வேண்டும் என்று கரோலினுக்குக் கட்டளையிட, அவளும் மறுபேச்சின்றி ஒரு லெமன் ஜூஸைக் குடித்துவிட்டு கிளம்பும் போது, “கிரிஷ், யூ ஆர் ரியலி லக்கி டூ ஹேவ் சச் அ லவ்லி ஃபேமிலி (கிரிஷ், இப்பிடி ஒரு குடும்பம் கிடைக்க அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்)” என்றுச் சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்றாள்.
பல வருட நட்புக்கான அடித்தளம் அங்கே போடப்பட்டது. அதன் பின் கிருஷ்ணஜாட்சியை ஹோட்டலின் சீஃப் செஃபிடம் வேங்கடநாதன் அறிமுகப்படுத்த, அவளுமே சமையலறையில் அணிய வேண்டிய கேப் மற்றும் ஏப்ரனை அணிந்து கொண்டவள், அவர் செய்வதைப் பொறுமையாக வேடிக்கை பார்த்தபடி தன் கையில் வைத்திருக்கும் நோட்டில் முக்கியமானவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
மாலை வீடு திரும்பிய இரு சகோதரிகளும் தங்களின் முதல் நாள் பள்ளி, கல்லூரி நிகழ்வுகளைச் சொல்லுவதற்காக அவர்களின் சின்ன மாமியைத் தேடிச் சென்றனர். நீரஜாட்சி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து, எகனாமிக்ஸ் டீச்சர் அன்று ஆரம்பித்து வைத்த ‘லா ஆஃப் டிமாண்ட்’ வரைக்கும் கண்ணை உருட்டி அழகாக விளக்க, சீதாலெட்சுமியும் பட்டாபிராமனும் பேத்தி சொல்லும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
மைத்ரேயி அவளது தலையில் செல்லமாகத் தட்டியவள், “நோக்கு பிளே கிரவுண்ட் போறச்சே தூக்கம் வராது. ஆனா லா ஆஃப் டிமாண்ட் பத்தி பேசுனா தூக்கம் வர்றதா? சாருலதா மிஸ் தானே? இருடி, இந்த வீக் சாட்டர்டே கிளாஸ் இருக்கில்ல, நானே வந்து அவங்க கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுறேன்” என்று கேலி செய்ய, அவள் “மைத்திக்கா” என்றுச் சிணுங்கியபடி முகத்தைச் சுருக்கும் போதே ராயல் என்ஃபீல்டின் சத்தம் கேட்க, அவள் சுருக்கிய முகத்துடன் எழுந்து இடத்தைக் காலி செய்தபடி அங்கிருந்து நகர, வழக்கம் போல அவளின் இந்தச் செய்கை ரகுநந்தனுக்கு எரிச்சல் மூட்ட, அவளைப் போலவே முகத்தைச் சுருக்கியபடி அவன் நடந்துச் சென்றது நீரஜாட்சியின் ஓரக்கண் பார்வையில் தெளிவாகத் தெரிந்தது.
அதே நேரம் அவள் எழுந்துச் சென்றதைப் பார்த்த சீதாலெட்சுமி மைத்ரேயியிடம், “மைத்தி, அவ நிஜமா நீ டீச்சரம்மாகிட்ட போட்டுக்குடுத்துடுவியோனு பயந்துண்டுப் போறாடி” என்று கேலி செய்துச் சிரிக்க, வாசல் படியேறி வராண்டாவில் நின்ற ரகுநந்தன் பாட்டியின் அருகில் குனிந்து,
“இவ்ளோ புத்திசாலியா இருக்கியே பாட்டி! அவா ஒன்னும் மைத்திக்கா சொன்னதுக்குப் போகல! அவளுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. அதான் எழுந்து ஓடறா” என்று எரிச்சலை மறைக்காத குரலில் கூறியவன், அப்போது தான் கிருஷ்ணஜாட்சியும் அங்கிருப்பதைக் கவனித்தவன் தனது தலையில் தட்டிக் கொண்டபடி எழுந்து உள்ளே செல்லும் போது பட்டாபிராமனின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.
“அவ என்னோட மதுரா மாதிரிடா! துஷ்டரைக் கண்டா தூர விலகணும்னு தெரிஞ்சிண்டு இடத்தைக் காலி பண்ணிட்டா!” என்று குத்தலாகச் சொல்ல, ரகுநந்தன்
“இங்க பாருங்கோ தாத்தா, உங்க பேத்தியை நீங்க கொஞ்சுங்கோ, தலை மேல தூக்கி வச்சிண்டு மொத்த சென்னையையும் சுத்தி வாங்கோ. ஐ டோண்ட் கேர். பட் எதுக்கு என்னை இப்பிடி ஹிட்லர் பார்வை பார்த்து கொல்லுறேள்? நானும் உங்க பேரன் தான். கொஞ்சமாச்சும் என்னண்டவும் பாசம் காட்டலாம். தப்பில்லே!” என்று மனம் பொறுக்காமல் கூறிவிட்டான்.
பட்டாபிராமன் நக்கலாக, “சீதே, கவனிச்சியாடி! உன் பேரனுக்குத் திடீர்னு நம்ம மேல என்ன ஒரு பாசம்னு! இந்த பெரிய மனுஷர் என்னையில இருந்து நம்ம பாசத்தை எதிர்பார்த்திண்டிருந்தார்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுறியோ நேக்கு? இத்தனை நாளும் குத்துக்கல்லாட்டாம் நானும் என் ஆத்துக்காரியும் இருக்கறச்ச நோக்கு, உன் அண்ணாக்கு, இந்த வீட்டோட குட்டி ராணிக்கு நாங்கல்லாம் கண்ணுக்கு அகப்படவே இல்ல! ஆனா என் பேத்திங்க வந்ததும் எங்களைச் சொந்தம் கொண்டாடுறேளோ? மனசைத் தொட்டுச் சொல்லுடா! நீயோ உன் அண்ணாவோ, கீர்த்தியோ என்னைக்காச்சும் தாத்தான்னு பிரியமா ரெண்டு வார்த்தை பேசிருப்பேளா? இந்த ஆத்துல மைத்தியத் தவிர வேற எந்தக் கழுதைக்கும் என் மேலயோ என் ஆத்துக்காரி மேலயோ துளி அக்கறை கெடையாது. ஆனா உரிமை கொண்டாடிண்டு மட்டும் வந்துடுங்கோ. அடேய் ரகுநந்தா, பாசம், மரியாதை ரெண்டுமே மனுஷாளுக்குத் தானா வரணும்டா. இப்பிடி கேட்டு வாங்கப்படாது” என்று நியாயமான ஒரு வயோதிகரின் ஆதங்கத்தை அன்று வெளிப்படுத்தி விட்டார்.
அவரின் ஆதங்கமும் சரி தான். ஹர்சவர்தன், ரகுநந்தன், ஸ்ருதிகீர்த்தி மூவருக்கும் உலகமே பத்மாவதி தான். ஏதோ மைத்ரேயி மட்டும் தப்பிப் பிறந்திருந்தாள் எனலாம். வழக்கமான தாத்தா பாட்டி போன்று பேரப்பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கியவர்கள் தான் பட்டாபிராமனும், சீதாலெட்சுமியும்.
ஆனால் அவர்கள் பத்மாவதியிடம் ஒட்டிக் கொண்ட அளவுக்குத் தாத்தா பாட்டியிடம் பழகவில்லை. அந்த வருத்தம் என்றைக்குமே பட்டாபிராமனுக்கு உண்டு. அதைத் தான் இன்று பொறுக்க முடியாமல் கொட்டித் தீர்த்துவிட்டார்.
ரகுநந்தன் அவர் அருகில் சென்று முழங்காலிட்டு அமர்ந்தவன், “பேசி முடிச்சிட்டேளா தாத்தா? நீங்க பண்ணுன ஆர்கியூமெண்ட் எல்லாமே ஓகே! ஆனா என்னோட தாத்தாவை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேனாக்கும்” என்றுச் சொல்லி அவர் கன்னத்தில் அழுத்தமாய்த் முத்தமிட,
அவர் சந்தோஷப்பட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “முதல்ல இந்தத் தாடியை மழிடா! காடாட்டம் வளர்ந்திண்டிருக்கு” என்று அதட்டலுடன் அன்பைக் காட்ட, அவன் அமர்த்தலாக “நோ நோ! அதுல மட்டும் நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறதில்ல தாத்தா! இதைப் பார்த்து காலேஜில எத்தனை பொண்ணுங்க மயங்கறாள் தெரியுமா?” என்றுச் சொல்ல, கிருஷ்ணஜாட்சி அதற்கு களுக்கென்று நகைத்துவிட்டாள்.
அவளைத் தொடர்ந்து மைத்ரேயியும் சிரித்துவிட, ரகுநந்தன் கிருஷ்ணஜாட்சியை கேலியாகப் பார்த்தபடி, “அத்தங்கா, ஆத்துல எல்லாரும் உன்னை அழகினு சொல்லிச் சொல்லியே ஏத்தி விட்டிண்டிருக்காளோன்னோ! அப்ப நோக்கு சிரிப்பு வரத் தான் செய்யும்! நோக்கு என் அழகைக் கண்டு பொறாமை” என்றுச் சொல்லிவிட்டு எழுந்துச் சென்றான் அவன்.
சீதாலெட்சுமி உள்ளே சென்றவனின் முதுகை ஆதுரத்துடன் பார்த்தவர், கிருஷ்ணஜாட்சியிடம் “இவன் பெரியவனாட்டம் அழுத்தக்காரன் இல்லடிம்மா! லொடலொடன்னு பேசிண்டே சுத்துவான். பெரியவனா வளர்ந்து காலேஜ்லாம் போக ஆரம்பிச்சதுல இருந்தே எங்களண்ட சரியாப் பேசறதில்ல. ஏதோ நீங்க வந்தப்புறம் தான் சின்னக் குழந்தை பொம்மைக்குச் சண்டை போடுற மாதிரி எங்களைச் சொந்தம் கொண்டாடிண்டுச் சுத்துறான். மத்தபடி ரொம்ப நல்ல மனசுக்காரன், என்னோட மகனை மாதிரி. மூத்தவன் தான் அவனைப் பெத்தவள் எங்கேனு வந்து பொறந்துட்டான். நோக்கு நந்து சொல்லிட்டுப் போனதுல ஏதும் வருத்தமில்லயே குழந்தே?” என்று கேட்க,
கிருஷ்ணஜாட்சி “சித்தம்மா, இதுலாம் சும்மா கிண்டலுக்குப் பேசுறது. இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனா நீரு அப்பிடி இல்ல. ஒரு தடவை அவளுக்கு யாரையாச்சும் பிடிக்காம போயிடுச்சுனா அவங்க நல்லவங்களாவே இருந்தாலும் அவ அவங்க கிட்ட ஒட்ட மாட்டா. போகப் போக இந்த குணம் மாறிடும்னு நானும் அம்மாவும் பேசிப்போம். ஆனா அவ மாறவேல்ல” என்று பெருமூச்சுடன் சொல்ல,
ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த ரகுநந்தனின் செவியை அந்த வார்த்தைகள் தீண்ட, அவன் “இந்தக் குட்டிப்பிசாசுக்கு என்னை பிடிச்சா என்ன? பிடிக்கலனா என்ன? இவ பெரிய எலிசபெத் மகாராணி பாரு. ஆனா பெரிய அத்தங்கா கொஞ்சம் நல்லவ தான் போல. ஹர்சா தான் தேவையில்லாம பயந்திண்டிருந்திருக்கான்” என்றபடி காபியை குடித்து முடித்துவிட்டு கப்புடன் சமையலறையை நோக்கிச் சென்றான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

