NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

மண்வாசனை

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“நதியூர்லாம் இறங்குங்க” என்ற நடத்துனரின் சத்தம் அவளை நினைவலைகளிலிருந்து மீட்டது.

“போலாம் ரைட்” என்று சொல்லிவிட்டு விசிலை ஊதியதும் மீண்டும் அந்த தார்ச்சாலையில் ஓடத்தொடங்கியது அந்த பேருந்து.

அவள் இறங்க வேண்டியது அடுத்த ஊரில் தான். அடுத்த ஊர் என்பது வெறும் பெயரளவுக்குத் தான். இதோ இன்னும் இரண்டே நிமிடத்தில் வந்து விடும் அவளது ஊரான ஆழியூர்.

தாமிரபரணியின் கரையில் இருக்கும் எத்தனையோ குக்கிராமங்களில் அதுவும் ஒன்று. சுழித்து ஓடும் கால்வாயைப் பார்த்தபடி லக்கேஜ் பேக் மற்றும் ஹேன்ட்பேக்குடன் எழுந்தவள் “ஆழியூர் வாங்க” என்ற நடத்துனரின் குரலில் நின்ற பேருந்திலிருந்து இறங்கினாள்.

காலை பதினொன்றரை மணிக்கே கதிரவன் தனது உக்கிரத்தைக் காட்ட சாலையின் மறுபுரம் இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கியவளின் முகம் மலர்ந்தது.

அங்கே சுடிதார் அணிந்து கூந்தலை கொண்டையாக முடிந்து நின்ற இளம்பெண்ணைப் பார்த்து கையசைத்தாள் அவள்.

அந்தப் பெண்ணும் அவளைக் கண்டுகொண்டாள்.

“ஏ புள்ள மதி! மெட்ராஸ் டிரெய்ன் வந்து சேர இவ்ளோ நேரமாயிட்டா?” என உச்சஸ்தாயியில் கேட்க அந்த மதி என்ற மதிவதனி சாலையைக் கடந்து அவளிடம் சென்றாள்.

நெருங்கி வந்தவளை கண்கொட்டாமல் பார்த்த அந்த இளம்பெண் “மெட்ராஸ் போயி ரொம்ப மாறிட்ட புள்ள” என்றாள் ஆச்சரியத்துடன்.

“ஏன்டி எனக்குத் தலையில கொம்பு எதும் முளைச்சிருக்கா?” என வினவிய மதிவதனி அந்தப் பெண்ணின் மூக்குத்தியைச் சுற்றியிருந்த பஞ்சு துணுக்கைக் காட்டி “இன்னும் மில் வேலைக்கு போறியா மலர்?” என்று கேட்க

“ஆமா புள்ள... வேற என்ன செய்ய சொல்லு! வாழக்காய் சீசன் முடிஞ்சதால காய் வெட்டு இல்லடி... அம்மா குளத்து வேலைக்கு (நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை எங்க சைட்ல இப்பிடி தான் சொல்லுவாங்க) போகுது... அதுல பாதி ரூவாய பஞ்சாயத்து போர்ட் கிளர்க்கு எடுத்துக்கிடுறான்... இப்பிடியே போனா வீட்டுல எப்பிடிலா அடுப்பெரியும்? அதான் நான் மறுவடியும் மில்லு வேலைக்கே போறேன்... அதை விட்டுத் தள்ளு... நீ எப்ப மெட்ராசுக்குப் போக போற? அத்தை கிட்ட கேட்டப்ப நீ ஒரு வாரம் பத்து நாள் இங்கயே தங்கிட்டு அப்புறமா போய் வேலையில சேர்ந்துடுவனு சொன்னாவ... அப்புறம் ஆதியண்ணன் எப்பிடி இருக்காவ? உங்களுக்குப் பேசிமுடிச்சாச்சுல்லா... வர்ற தையில கல்யாணம்னு கேள்விப்பட்டேன்... என் கிட்ட கூட நீ சொல்லல... உன் கூட சண்டை போ புள்ள” என்று படபடவென ஒரு வருடத்திற்கான பேச்சையும் முடித்தாள் மலர் என்ற மலர்விழி.

“எல்லாம் திடீர்னு நடந்துடுச்சு மலர்... ஏய் பஸ் வருதுடி... சரி நீ இப்ப கிளம்பு... சாயங்காலம் வீட்டுக்கு வா... நான் உனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்... அதை காட்டுறேன்... எல்லா கதையும் அப்போ பேசிக்கலாம்” என்று மதிவதனி சொல்ல

“சரி புள்ள நான் போறேன்... சாயங்காலம் வந்து உன் கிப்டை பாத்துக்கிடுறேன்” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினாள் மலர்விழி.

அவளுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டை நோக்கி முன்னேறினாள் மதிவதனி. அந்த ஊர்க்கார பெரியதலைக்கட்டான பரமேஸ்வரனின் கடைக்குட்டி பெண் அவள். அவளுக்கு முன்னர் இரண்டு ஆணும் இரண்டு பெண்ணுமாக பெரியவர்கள் இருக்க அவர்களுக்கு இல்லாத சுதந்திரம் அவளுக்கு கிடைத்திருந்தது.

அதில் ஒன்று விருப்பப்பட்ட படிப்பை படித்தது. இரண்டாவது வெளியூரில் சென்று தங்கி படித்தது.

அவர்கள் வட்டாரத்தில் பெண்ணின் பட்டப்படிப்பு என்பது படித்த மாப்பிள்ளையை மணமுடிக்க அவளுக்கு இருக்கும் தகுதியாக மட்டுமே பார்க்கப்படுமேயன்றி அந்தப் படிப்பை யாரும் பொருட்டாக மதிப்பதில்லை.

அதற்கு விதிவிலக்கு மதிவதனி. அவளுக்குச் சமுதாயத் தொண்டாற்றுவதில் பள்ளி காலத்திலேயே இருந்த ஆர்வத்தால் பி.எஸ்.டபிள்யூவை பட்டப்படிப்பாக தேர்ந்தெடுத்தாள்.

அதற்காக சென்னை சென்றேயாகவேண்டும் அவள் அடம்பிடிக்க அவளது மூத்த சகோதரனோ “நம்ம சேவியர்ஸ் காலேஜ்ல கூட அந்த கோர்ஸ் இருக்குல்லா... நீ ஏன் அவ்ளோ தூரம் போகணும்? பொட்டப்புள்ளைய அங்க அனுப்பிட்டு நாங்க இங்க திக்திக்னு சுத்தணும்” என்று முதல் தடைக்கல்லைப் போட்டான்.

ஆனால் அவளது தந்தை மனப்பூர்வமாகச் சம்மதித்து அவளை அங்கே அனுப்பிவைத்தார். பி.எஸ்.டபிள்யூவைத் தொடர்ந்து எம்.எஸ்.டபியூள்வையும் முடித்தவள் சென்னையிலேயே ஒரு பிரபலத் தொண்டுநிறுவனத்தில் பயிற்சிக்கு விண்ணப்பித்து தேர்வாகவும் செய்தாள்.

அந்தத் தருணத்தில் தான் மலர்விழி சொன்னபடி திடுதிடுப்பென அவளுக்கும் அவளது அத்தை மகனான ஆதித்யாவுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. மதிவதனிக்கு அதில் மறுப்பு ஏதுமில்லை;

அவன் படித்திருக்கிறான். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேறு! அத்தோடு அவனது அன்னை விஜயலெட்சுமியை மதிவதனிக்கு மிகவும் பிடிக்கும். எனவே சம்மதித்துவிட்டாள். நிச்சயமும் சென்னையில் விஜயலெட்சுமியின் இல்லத்தில் எளிமையாக நடந்தேறிவிட்டது.

தை மாதம் திருமணம் என பேசிவைத்திருந்த நேரத்தில் தான் அவளுக்கும் ஆதித்யாவுக்கும் இடையே அந்தக் கருத்துவேறுபாடு முகிழ்த்தது.

அதுவும் அவளது தொண்டுநிறுவன வேலை சம்பந்தமாகத் தான். எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுகுழந்தைகளை அந்த தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்றில் வைத்து பராமரித்துவந்தனர். அதைப் பார்வையிட ஆதித்யாவை ஒரு நாள் அழைத்துச் சென்றது தான் அவள் செய்த மாபெரும் தவறு.

அங்கே நுழைந்தது முதல் அவளின் கவனம் அவன் மீது திரும்பவில்லை. வேலை ஒரு பக்கம் இருந்தாலும் உயிர்கொல்லியால் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் சிறுபிள்ளைகள் ஆசையாகப் பேச வருவதை அவளால் தடுக்கமுடியவில்லை. அவர்களுடன் பேசி, கதை சொல்லி, அவர்களுடனே சாப்பிட்டு என நேரத்தை முழுவதுமாக அவர்களுடனே செலவளித்தவள் சராசரி ஆணின் பாதுகாப்பின்மை உணர்ச்சியை மறந்தே போனாள்.

அன்று மாலை இருவரும் கடற்கரைக்குச் சென்ற போது ஆதித்யா தங்களது திருமணத்துக்குப் பிறகு இந்தச் சமூகசேவையை விட்டொழியுமாறு கண்டிப்பாக சொல்ல இதுவரை யாருமே கண்டித்து அனுபவப்படாத மனிவதனி அதில் எரிச்சலுற்றாள்.

“அப்போ நீயும் உன்னோட வேலையை ராஜினாமா பண்ணிடு” என்றாள் சட்டென்று.

அதைக் கேட்டதும் அவள் ஏதோ பஞ்சமாபாதகத்தைச் செய்யச் சொன்னது போல ஆதித்யாவின் முகம் மாறிவிட்டது.

“வாட்? நீ பண்ணுற வேலையும் என்னோட வேலையும் ஒன்னா? நேரம் போகாம, பேர் புகழுக்கு ஆசைப்பட்டு சமூகசேவை செய்யுறேனு கிளம்புறவங்கள நான் கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா உன்னை மாதிரி பைத்தியக்காரத்தனமா அதுல மூழ்கிப்போற ஒருத்திய இப்போ தான் பாக்குறேன்.. ஏன் மதிவதனி தி கிரேட்னு எல்லாரும் உன்னை பாராட்டணும்னு ஆசைப்படுறியா?”

“எனக்கு என்னோட வேலையில கிடைக்குற ஆத்மதிருப்திய பத்தி சொன்னாலும் உனக்குப் புரியாது ஆதி... நான் சோஷியல் ஒர்க்க செலக்ட் பண்ணுனதே எங்க ஊர் மக்களுக்காக தான்... அங்க இருக்குற ஒவ்வொரு குழந்தைங்களுக்காகவும் தான்... இவ்ளோ வியாக்கியானமா பேசுற நான் பிறந்த ஊர்ல இன்னும் எத்தனை குழந்தைங்க படிக்கப் போகாம சின்னவயசுலயே வேலைக்குப் போறாங்க தெரியுமா? என் வயசு பொண்ணுங்க அங்க இருக்குற பஞ்சுமில்லுல வேலைக்கு போறாங்க... அந்த மேனேஜ்மெண்ட் அவங்களோட சேப்டிக்குனு ஒரு கல்லை கூட தூக்கிப் போடல... அந்த பஞ்சு தூசை இன்ஹேல் பண்ணுனா அது லங்க்ஸ்ல டெப்பாசிட் ஆகும்னு கூட அவங்களுக்குத் தெரியாது... அவங்களுக்கு அவேர்னெஸ் குடுக்க நான் ஒரு என்.ஜி.ஓ ஸ்டார்ட் பண்ணுற ஐடியால இருக்கேன்... அதுவும் என்னோட ஊர்ல... அதுக்கான பாடத்தை தான் இங்க வேலை செஞ்சு கத்துக்கிறேன் ஆதி... என்னால இந்த வேலைய எந்தக் காரணத்துக்காகவும் தியாகம் பண்ணமுடியாது.. அது என் கல்யாணமா இருந்தாலும் சரி” என்று பேச்சை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அதன் பின்னரும் போனில் அவளுடன் பேசி மனதை மாற்ற முயற்சித்தான் ஆதித்யா.

“லுக் மதி! இந்த சிட்டில இல்லாததா அந்தப் பட்டிக்காட்டுல இருக்க போகுது? நம்மளோட பார்வை எப்போவும் ஆகாயத்தைப் பாத்து தான் இருக்கணும் மதி”

“இசிட்? நம்மளோட பார்வை ஆகாயத்தைப் பாத்து இருக்கலாம்... ஆனா நம்ம கால் தரையில தான் இருக்கணும்னு நினைக்கிறவ நான்... நீ ஆகாயமா நினைக்குற இந்த சிட்டியோட சோபிஸ்டிகேட்டட் லைப்ஸ்டைல் உனக்குப் பிடிச்சிருக்கலாம்... கைவிரல்ல அழுக்குப்படாம செய்யுற உன் வேலை மேல் உனக்கு அளவுக்கதிகமான காதல் கூட இருக்கலாம்.. ஆனா என்னோட காதல் எல்லாமே நான் பிறந்த மண் மேலயும் என் வேலை மேலயும் தான்... யூ டிசர்வ் சம்ஒன் பெட்டர் தன் மீ”

அதன் பின்னர் என்னென்னவோ நடந்தது. ஆதித்யாவால் தன் பேச்சை தட்டும் ஒரு பெண்ணை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவனது அன்னை சொல்லவே “அப்போ உங்க பையனுக்கு வேற பொண்ணு பாத்துடுங்க அத்தை... நான் அவனுக்கு சரியா வரமாட்டேன்” என்று மதிவதனி சொல்லிவிட அந்தத் திருமணப்பேச்சு முறிந்து போனது.

பரமேஸ்வரனும் மகளின் மனமறிந்த தந்தை. அவளது சந்தோசம் தான் முக்கியம் என முடிவெடுத்தவர் மனைவி மக்களிடம் மதிவதனியை எதுவும் சொல்லக்கூடாது என ஆணையிட்டுவிட்டார்.

அதன் பின்னர் தான் மதிவதனி தனது பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஆழியூர் திரும்பினாள்.

நடந்த அனைத்தையும் மாலை வீட்டுக்கு வந்த மலர்விழியிடம் சொல்லிமுடித்தாள் மதிவதனி.

“இவ்ளோ நடந்திருக்கா புள்ள? நான் வேற லூசு மாதிரி உனக்கு ஆதியண்ணனை நியாகப்படுத்திட்டேனே” என்று தன் தலையில் குட்டிக்கொண்டாள் அவள்.

“விடு மலர்... எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு... இனிமே நான் எங்கயும் போகமாட்டேன்... இங்க நம்ம ஊர்ல தான் இருக்கப் போறேன்... என்னோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேர் இன்னும் கொஞ்சநாள்ல வந்துடுவாங்க... அவங்களும் நானும் சேர்ந்து ஒரு என்.ஜி.ஓ ஆரம்பிக்கப்போறோம்... இங்க படிக்க முடியாத பிள்ளைங்களுக்கு ஃப்ரீயா நாங்களே படிப்பு சொல்லிக்குடுப்போம்... நம்ம வயசு பொண்ணுங்களுக்கு மில்லுல வேலை பாக்குறப்போ எப்பிடி பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லிக்குடுப்போம்... இன்னும் நிறைய ஐடியா வச்சிருக்கோம் மலர்” என்றாள் மதிவதனி ஆர்வமாக.

மலர்விழி அனைத்தையும் பிரமிப்புடன் கேட்டவள் “நம்ம ஊர்க்கார பயலுங்க எத்தனை பேரு கேரளா, மெட்ராசுனு போறானுவோ... அவனுங்க எல்லாருமே அங்கயே இருந்துடுறானுவ... ஒருத்தனுக்கும் ஊர்ப்பாசம் இல்ல புள்ள... அந்த தினேஷு பய நம்ம கூட ஒன்னாங்கிளாஸ் படிச்சவன், மெட்ராசுல தான் வேலை பாக்கான்.. திருவிழாவுக்கு நம்ம ஊருக்கு வர்றப்ப நம்ம ஊர்க்காரங்களை பட்டிக்காட்டானுங்கனு சொல்லி கிண்டல் பண்ணுவான்... ஆனா நீ அவனுங்கள மாதிரி இல்ல புள்ள” என்றாள் மனநிறைவுடன்.

“அவங்களுக்கும் ஊர்ப்பாசம் இருக்கும் மலர்... இந்த வயசுல தானே சம்பாதிக்கமுடியும்... சம்பாதிச்சு ஓய்ஞ்சதும் ஊர்ப்பாசம் வரும்... அப்போ இங்க தான் வருவாங்க... ஆனா நான் பொண்ணு... எப்பிடி இருந்தாலும் இன்னும் நாலு வருசம் என்னை வீட்டுல வச்சுப்பாங்களா, அதுக்குள்ள என்னால நம்ம ஊருக்கு என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிடனும் மலர்... எனக்கு வேற எந்த ஆசையும் இல்ல” என்றாள் மதிவதனி.

“அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் இதை விட்டுருவியா?” என கண்கள் அகல கேட்டாள் மலர்விழி.

“ஒரு தடவை வீட்டுல பாத்த மாப்பிள்ளைய என் கனவுக்காக தூக்கிப்போட்டுட்டேன்... எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா இதுவே தொடர்கதை ஆச்சுனா அப்பா மனசு வருத்தப்படுவார்... அவங்களுக்காக நான் கல்யாணம் பண்ணித் தானே ஆகணும்... அதுக்குள்ள செய்யணும்னு நினைக்கிற எல்லா வேலையையும் செஞ்சு முடிக்கணும் மலர்” என்றாள் மதிவதனி உத்வேகத்துடன்.

அவளுக்கு முகம் வழித்து திருஷ்டி கழித்த மலர்விழி “உன் ஆசைக்கு ஏத்த மகாராசனா புருசன் அமைவான்டி... கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட வேலைக்கு அவன் எல்லா உதவியும் பண்ணுவான்... அதை விடு புள்ள, என்னோட கிப்டை எடு” என்று கேட்க அவளுக்காக வாங்கி வந்த மொபைல் போனை அவள் கையில் திணித்தாள் மதிவதனி.

மலர்விழி கண்கள் விரிய ஆசையுடன் அதை பார்க்க “போன தடவை நான் கால் பண்ணுனப்போ உன்னோட சூபர்வைசர் உன் கிட்ட தப்பா பேசுறான்னு சொன்னல்ல, இனிமே அவன் பேச வந்தா இதுல வீடியோவா எடு... அவனுக்கு நம்ம பாடம் கத்து குடுப்போம்... இது அவனுக்கு மட்டும் இல்ல, வேலைக்குப் போற இடத்துல பொண்ணுங்க கிட்ட தப்பா நடக்க நினைக்கிற அத்தனை அல்பஜந்துக்கும் ஒரு பாடமா இருக்கும்” என்றாள் மதிவதனி.

மலர்விழி தலையை ஆட்டிவைத்தவள் “எப்பிடியோ உன் வேலைய இதுல இருந்து ஆரம்பிக்கிற, அப்பிடி தானே மதி புள்ள?” என்று குறும்பாக கேட்க

“அப்பிடியும் வச்சுக்கலாம்” என்று தோளைக் குலுக்கினாள் மதிவதனி.

அப்போது வெளியே சடசடவென மழை வரும் சத்தம் கேட்க “என்னலா மார்கழி மாசம் மழை பெய்யுது?” என கேட்டபடியே மதிவதனியுடன் வெளியே ஓடிவந்து திண்ணையில் அமர்ந்துகொண்டாள் மலர்விழி.

“நான் வந்திருக்கேன்ல... அதான் இந்த மண் என்னை வரவேற்குது... இனிமே இங்க இருந்து எங்கயும் போறதா இல்ல” என்ற மதிவதனி மலர்விழியை நோக்கிப் புன்னகைத்தவள் அவளுடன் சேர்ந்து காலை ஆட்டியபடியே அமர்ந்தாள் மழைச்சாரல் மண்ணில் விழுந்து உண்டாக்கிய மண்வாசனையை உள்ளிழுத்து அனுபவித்தபடியே!

************

ஹலோ மக்களே

இந்தச் சிறுகதை பிரதிலிபி டெய்லி டாபிக்குக்காக 24 ஜனவரி 2021ல எழுதுனேன். அடுத்த வாரம் வேற ஒரு சிறுகதையோட வர்றேன். குட் நைட்.

1765110779-WhatsApp-Image-2025-12-07-at-180219_18ba3f1a.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : December 7, 2025 6:02 PM
(@crvs2797)
Reputable Member Member

வாவ்...! மதிவதனியோட மண்வாசனைப் பற்றும் சமூகச்சேவை உணர்வும் உண்மையிலயே மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

 

😄😄😄

CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : December 7, 2025 8:59 PM
(@kothai-suresh)
Honorable Member Member

மதியோட மண்வாசனை சூப்பர்👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : December 7, 2025 11:28 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images